முல்லைத்தீவு நகரை அண்டிய பகுதிகளில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை விமானப்படை விமானங்கள் நடத்திய கடும் தாக்குதலில் இளைஞன் ஒருவர் கொல்லப்பட்டதுடன் இரு சிறுமிகள் உட்பட எட்டுப் பேர் படுகாயமடைந்துள்ளனர்.
முல்லைத்தீவு நகரின் மத்தியில் கத்தோலிக்க தேவாலயமாயிருந்து கடல்கோள் அனர்த்த நினைவுச் சின்னமாயிருக்கும் பகுதியிலும் கரையோரப் பகுதியிலுமே திங்கட்கிழமை மாலை 3.50 மணியளவில் கடும் விமானத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இத்தாக்குதலில் கடல்கோள் அனர்த்த நினைவுச் சின்னமும் அப்பகுதியிலுள்ள வீடுகளும் பலத்த சேதமடைந்துள்ளன.
இதில் அம்பலவன்பொக்கணையைச் சேர்ந்த உகந்தன் (18 வயது) என்பவர் கொல்லப்பட்டார்.
இத்தாக்குதலில் விசுவமடு உழவனூரைச் சேர்ந்த தியாகராசா (48 வயது), முல்லைத்தீவு மணற்குடியிருப்பைச் சேர்ந்த கிரிசாளினி (8 வயது), தருமபுரம் 8 ஆம் யுனிற்றைச் சேர்ந்த சுதாகரன் (22 வயது), வண்ணாங்குளத்தைச் சேர்ந்த ஜீவரட்ணம் (65 வயது), முல்லைத்தீவு கள்ளப்பாடுவைச் சேர்ந்த லக்சனா (5 வயது), பொக்கனையைச் சேர்ந்த கனிஸ்ரன் (17 வயது), மணற்குடியிருப்பைச் சேர்ந்த அன்ரனி ஜெராட் (42 வயது), தீர்த்தக்கரையைச் சேர்ந்த சத்தியநாதன் (42 வயது) ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக முல்லைத்தீவு கரையோரப் பகுதியில் விமானப் படை விமானங்கள் தொடர்ச்சியாக கடும் தாக்குதலை நடத்திவருவதும் தெரிந்ததே.