யாழ்.முகமாலைப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை கவசப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு முயற்சி தங்களால் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் யுத்த டாங்கியொன்று அழிக்கப்பட்டதுடன், மோட்டார் நிலையும் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்றுக் காலை 7.30 மணியளவில் முகமாலையில் விடுதலைப் புலிகளின் முன்னரங்க நிலைகளை தகர்த்துக் கொண்டு இராணுவ கவசப் படையணியினர் முன்னேற முயன்ற போதே கடும் மோதல் வெடித்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
டாங்கிகள் மற்றும் கவச வாகனங்கள் சகிதம் கடும் ஷெல் தாக்குதலையும் மோட்டார் தாக்குதலையும் பீரங்கித் தாக்குதலையும் நடத்தியவாறு படையினர் பாரிய முன்நகர்வு முயற்சியை மேற்கொண்டனர்.
இதையடுத்து விடுதலைப் புலிகளின் டாங்கி எதிர்ப்புப் படையினர் கடும் பதில் தாக்குதலை தொடுத்துள்ளனர். இதையடுத்து இரு தரப்புக்குமிடையே உக்கிர மோதல் இடம்பெற்றுள்ளது.
சுமார் அரைமணிநேரம் இடம்பெற்ற இந்த மோதலில், யுத்த டாங்கியொன்று முற்றாக அழிக்கப்பட்டதுடன், படையினருக்கு பலத்த உயிர்ச் சேதமும் ஏற்பட்டதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
தங்களது கடுமையான பதில் தாக்குதலையடுத்து படையினர் பலத்த இழப்புகளுடன் பின் வாங்கிச் சென்றதாகவும் புலிகள் தெரிவித்தனர். இதேநேரம், தாங்கள் மேற்கொண்ட கடும் ஷெல் தாக்குதலில் எழுதுமட்டுவாள் பகுதியில் இராணுவத்தினரின் மோட்டார் நிலையொன்று தீப்பற்றி எரிந்து நாசமானதாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர்.