*கருணாரட்ணம் அடிகளின் இறுதி நிகழ்வில் நடேசன்
ஆன்மீகப் பணியை தமிழ் மக்களின் விடுதலைக்காகப் பயன்படுத்தியவராக கருணாரட்ணம் அடிகளார் விளங்கினார் என்று விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.
கருணாரட்ணம் அடிகளாரின் இறுதிவணக்க நிகழ்வு கிளிநொச்சி புனித திரேசாள் ஆலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் இறுதிவணக்க உரையாற்றிய போது மேலும் தெரிவித்ததாவது;
ஆன்மீகப் பணியை விடுதலைக்காகப் பயன்படுத்தியவராக கருணாரட்ணம் அடிகளார் விளங்கினார்.
தமிழ் மக்களின் அவலங்களை அனைத்துலக சமூகத்தின் முன் எடுத்துச் சென்றவர் என்ற வகையில் இலங்கை அரசு கருணாரட்ணம் அடிகளாரை கிளைமோர் தாக்குதல் மூலம் படுகொலை செய்துள்ளது. அரசு புரிந்து வரும் மனித உரிமை மீறல்களை வடக்கு- கிழக்கு மனித உரிமை செயலகம் ஊடாக அனைத்துலக சமூகத்தின் முன் எடுத்துச் செல்வதில் கருணாரட்ணம் அடிகளார் பெரும் பங்காற்றினார்.
யாழ்ப்பாண இடப்பெயர்வுடன் மக்கள் பேரவலத்தை சுமந்து நின்ற நேரத்தில் மக்களின் துயர் துடைப்பதில் பெரும் பங்காற்றினார். வெரித்தாஸ் வானொலி ஊடாக தமிழர்களின் அவலங்களை சர்வதேச நாடுகளுக்கு எடுத்துச் செல்வதில் கருணாரட்ணம் அடிகளார் சிறப்புடன் பணியாற்றினார்.
இதன் காரணமாக ஒரு ஆன்மீகப் பணியைப் புரிகின்றவர் தனது சக்திக்கு அப்பால் துயர் சுமந்து நின்ற தமிழ் மக்களின் அவலங்களை வெளியுலகிற்குக் கொண்டு செல்வதில் பெரும் பங்காற்றினார்..
அரசு தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டிருந்த கொடூர போரையும் அதனால் எழுந்த மனித அவலங்களையும் சர்வதேச சமூகத்திற்கு எடுத்துச் செல்வதில் பெரும் பங்கு வகித்தார். எல்லாவற்றிற்கும் மேலாக தமிழர்களுக்கு எமது தலைவரின் காலத்தில் விடுதலை பெற வேண்டும் என்ற பேரவா சுமந்தவராக கருணாரட்ணம் அடிகளார் விளங்கி வந்தார். அரசின் மனித உரிமை மீறல்கள் கருணாரட்ணம் அடிகளார் ஊடாக சர்வதேச சமூகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதன் காரணமாக இலங்கை அரசுக்கு ஏற்பட்ட அழுத்தம் காரணமாக கருணாரட்ணம் அடிகளாரை படுகொலை செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு அரசு வந்தது. அதனை நிறைவேற்றியும் உள்ளது.