பி.ரவிவர்மன்
கொழும்புக்கு வருகை தந்திருக்கும் அமெரிக்க வெளிவிவகார அமைச்சின் தெற்காசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான உயரதிகாரி டொனால்ட் கெம்மும் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவர் ரொபேர்ட் பிளேக்கும் தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.க்.களுடன் நேற்று செவ்வாய்க்கிழமை திடீர் சந்திப்பு ஒன்றை நடத்தியதுடன், வட,கிழக்கின் தற்போதைய நிலைவரம், மாகாணசபைத் தேர்தல் மற்றும் மனித உரிமை நிலைவரம் என்பன குறித்து விபரமாகக் கேட்டறிந்துள்ளனர்.
கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 11 மணி தொடக்கம் சுமார் இரு மணி நேரம் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக்களின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், எஸ். பத்மநாதன், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் இந்தச் சந்திப்பின் போது கலந்து கொண்டனர்.
இலங்கையின் தற்போதைய அரசியல் நெருக்கடி நிலைமைகள், தொடரும் மனித உரிமை மீறல் சம்பவங்கள், இனநெருக்கடித் தீர்வு முயற்சிகள் தொடர்பாக ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகள் என்பன தொடர்பாக அமெரிக்கா அரசின் வெளிவிவகார அமைச்சின் தெற்காசிய விவகாரங்களுக்கு பொறுப்பான உயரதிகாரி டொனால்ட் கெம் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ரொபேர்ட் பிளேக் ஆகியோர் விரிவாக கேட்டறிந்துள்ளனர்.
இந்தச் சந்திப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக விளக்கமளிக்கையில் தெரிவித்ததாவது;
"வடக்கு,கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசத்தில் மட்டுமன்றி, தென்னிலங்கையிலும் தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல் சம்பவங்கள் மிக மோசமானளவில் அதிகரித்துள்ளன.
அரச படையினராலும் ஆயுதக் குழுக்களினாலும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் ஆட்கடத்தல், கப்பம் கோரல், பாலியல் வல்லுறவு, கைது, காணாமல் போதல், படுகொலை போன்ற மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக பல்வேறு தரப்பினராலும் அரச தரப்பின் உயர்மட்டத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ள போதிலும் எந்தவொரு நடவடிக்கையும் இதுவரையும் எடுக்கப்படவில்லை.
மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் ஆயுதக் குழுக்களினால் சிறுவர்கள் மட்டுமன்றி, இரவு நேரங்களில் பெண்களும் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர்.
வன்னிப் பிரதேசத்தில் விமானக் குண்டு வீச்சுகள் மற்றும் ஆழ ஊடுருவும் படையினரின் தாக்குதல்கள் காரணமாக பாடசாலை மாணவர்கள், மதகுருமார்கள், அரச உயரதிகாரிகள் ஆகியோர் படுகொலை செய்யப்படும் நிலைமை தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
யாழ்.குடாநாட்டு மக்கள் பொருளாதாரத் தடை காரணமாக பட்டினிச்சாவை எதிர்கொண்டுள்ள நிலையில், இராணுவ ஆக்கிரமிப்பு காரணமாக பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர்.
தமிழர் தாயகப் பிரதேசமான வடக்கும், கிழக்கும் பிரிக்கப்பட்ட நிலையில், அங்கு ஏற்கனவே நடத்தப்பட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தலும் நடைபெறப்போகும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலும் சர்வதேச சமூகத்தையும் நாட்டு மக்களையும் ஏமாற்றும் அரசின் ஒரு மோசடி நடவடிக்கையாகும்.
தொடரும் அரசின் மனித உரிமை மீறல் சம்பவங்கள் மற்றும் தமிழ் மக்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக அமெரிக்காவும் சர்வதேச சமூகமும் மனிதாபிமான ரீதியில் துரித நடவடிக்கையெடுக்க வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.