கடந்த காலங்களில் அநுராதபுரம் விமானப்படைத்தளம் மற்றும் கட்டுநாயக்க விமானப்படை நிலையங்கள் மீது சிறியரக விமானங்கள் மூலம் விமானக்குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தி பெரும் சேதங்களை விளைவித்திருக்கும் புலிகள் இயக்கம், மீண்டும் விமானத்தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டிருப்பதாகவும் இதற்கேற்ப தெற்கில் முக்கிய படையினர் முகாம்கள், விமானத்தளங்கள், துறைமுகங்கள் மற்றும் பொருளாதார நிலையங்களில் ஏதேனும் முக்கிய நிலையம்மீது மீண்டும் புலிகள் இயக்கம் விமானத்தாக்குதல் மேற்கொள்ளக்கூடிய சாத்தியம் உள்ளதாகவும் பாதுகாப்புப் புலனாய்வுப் பிரிவு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு புலிகள் இயக்கம் மீண்டும் விமானத்தாக்குதலை மேற்கொள்ளக்கூடிய சாத்தியம் சார்பாக பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவு தரப்பில் கூறப்படும் காரணங்களுக்கேற்ப கடந்த ஆண்டு இரண்டு மாதங்களில் மட்டும் மன்னார் பிரதேசத்தில் புலிகளின் கட்டுப்பாட்டுக்கு கீழுள்ள பிரதேசங்களில் குறிப்பிட்ட வான்பரப்பில் புலிகளின் சிறியரக விமானங்கள் நான்கு தடவைகள் பறந்துள்ளதாகவும் இந்தத்தகவல்கள் குறித்து மன்னார் பகுதியிலிருந்து படையினர் மற்றும் புலானாய்வுப் பிரிவினர் தரப்பால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மேலும், தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது மன்னார் உட்பட வன்னிப் பிரதேசங்களில் அரச படையினர் தீவிர தாக்குதல்களை மேற்கொண்டுவருவதாலும் இதனால் புலிகள் இயக்கத்தினர் தோல்வியடைந்து பின்வாங்கிய நிலையிலும் வாய்மூடி மௌனமாயிருக்கும் பிரபாகரன், அரசுக்கு எதிரான பெரும் தாக்குதலுக்குத் திட்டமிடுவதாகவும் அது அவர்களின் விமானத் தாக்குதல்களாக இருக்கக்கூடிய சாத்தியம் உள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இவ்வாறான விமானத்தாக்குதலை புலிகள் இயக்கம் கடலில் வெற்றிகரமாக நடமாடிவரும் கடற்படையினரின் யுத்தப்படகுகள் மீதோ, இராணுவ வாகனத்தொடரணிகள் மீதோ மேற்கொள்ளக்கூடும் எனவும் அவ்வாறே முக்கிய பொருளாதார மத்திய நிலையங்கள் மீதோ, அரசியல் பிரமுகர்களின் வசிப்பிடங்கள் மீதோ அல்லது பொதுமக்கள் மீதோ புலிகள் இயக்க விமானப்பிரிவினர் மேற்கொள்ளக்கூடிய சாத்தியமும் உள்ளதாக மேலும் பாதுகாப்பு புலனாய்வுப்பிரிவு எச்சரித்துள்ளது.
லங்காதீப விமர்சனம் 20.04.2008