ஆசிய தலைவர் கிண்ண உதைபந்தாட்டப் போட்டி முதன் முதலாக 2005 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதுவரை 2 தடவைகள் நடைபெற்ற இப்போட்டியிலும் 3 ஆவது தடவையாக இலங்கையில் நடைபெறவிருக்கும் இப்போட்டியிலும் இலங்கையின் சார்பில் ரட்ணம் கழகமே தொடர்ந்து பங்கு பற்றி வருகின்றது.
இவ்வாறு இலங்கை உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் தலைவரும் ரட்ணம் கழகத்தின் தலைவருமான ஹோர்லி சில்வேரா தெரிவித்தார்.
அவர் இப்போட்டி பற்றி மேலும் தெரிவிக்கையில்;
ஆசிய தலைவர் கிண்ண உதைபந்தாட்டப் போட்டி இன்று 23 ஆம் திகதி கொழும்பு சுகததாச விளையாட்டு அரங்கில் ஆரம்பமாகின்றது. 2005 ஆம் ஆண்டு நேபாளத்தில் நடைபெற்ற 1 ஆவது போட்டியில் கிர்கிஸ்தான் அணியும் 2007 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற்ற 2 ஆவது போட்டியில் துர்க்மெனிஸ்தான் அணியும் சாம்பியன் கிண்ணங்களைக் கைப்பற்றின.
கடைசியாக பாகிஸ்தானில் நடைபெற்ற போட்டியில் எமது ரட்ணம் கழகம் அரை இறுதிப் போட்டி வரை முன்னேறி ரைபிறேக்கர் முறையில் தோல்வியடைந்தது.
இம்முறை எமது ரட்ணம் கழகத்தில் இலங்கை தேசிய அணியைச் சேர்ந்த 8 வீரர்கள் அங்கம் வகிப்பதினால் எமது அணி மிகவும் பலம்வாய்ந்த நிலையில் இருப்பதுடன் இப்போட்டி இம்முறை இலங்கையில் நடைபெறுவதினாலும் எமது அணி வீரர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது.
ஆசிய உதைபந்தாட்டச் சபையினால் நடாத்தப்படும் இப்போட்டி இம்முறை இலங்கையில், இலங்கை உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் ஆதரவுடன் நடைபெறுவது குறிப்பிடத்தக்கதென்றும் சில்வேரா தெரிவித்தார்.
இன்று புதன்கிழமை 4.30 மணிக்கு 1 ஆவது போட்டியில் துர்க்மெனிஸ்தான் அணியை எதிர்த்து மியன்மார் அணி மோதுகின்றது. மாலை 6.30 மணிக்கு ஆரம்பமாகும் 2 ஆவது போட்டியில் ரட்ணம் கழகத்தை எதிர்த்து பூட்டான் அணி மோதும்.