பங்களாதேஷுக்கு எதிரான `ருவென்ரி - 20' போட்டியில் மிஸ்பா - உல் - ஹக் அதிரடியாக ஓட்டங்கள் எடுக்க பாகிஸ்தான் 102 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பங்களாதேஷ் அணி 5 ஒரு நாள் மற்றும் ஒரு `ருவென்ரி - 20' போட்டி கொண்ட தொடர்களில் விளையாடியது. ஒரு நாள் தொடரை பாகிஸ்தான் 5-0 என முழுமையாக வென்றது. இந்நிலையில் ருவென்ரி - 20' போட்டி நேற்று முன்தினம் கராச்சியில் நடந்தது. நாணயச் சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் முதலில் ஆடியது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய சல்மான் பட் (1), அக்மல் (0) விரைவில் வெளியேறி அணிக்கு மோசமான தொடக்கம் கொடுத்தனர். அடுத்து வந்த மிஸ்பா, யூனிஸ் கானுடன் ஜோடி சேர்ந்தார். யூனிஸ் 7 பவுண்டரி உட்பட 28 பந்தில் 47 ஓட்டங்கள் எடுத்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை 3 ஓட்டங்களில் நழுவவிட்டார்.
கப்டன் சொய்ப் மாலிக் 3 சிக்ஸர், 2 பவுண்டரி உட்பட 18 பந்தில் 35 ஓட்டங்கள் எடுத்தார். அப்ரிடி (10) இம்முறை சோபிக்கவில்லை. 5 சிக்ஸர், 3 பவுண்டரி விளாசிய மிஸ்பா 53 பந்தில் 87 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமலிருந்தார்.
பாகிஸ்தான் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 203 ஓட்டங்கள் எடுத்தது. கடின இலக்கை `சேஸ்' செய்த பங்களாதேஷின் தமிம், நசிமுதின் ஓரளவு நல்ல தொடக்கம் கொடுத்தனர். தமிம் 23 ஓட்டங்கள் எடுத்தார். நிதானமாக விளையாடிய நசிமுதின் 48 பந்தில் 42 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கப்டன் அஷ்ரபுல் 13 ஓட்டங்களுக்கு நடையை கட்டினார்.
மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேற, பங்களாதேஷ் 16 ஓவரில் 101 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. பாகிஸ்தான் 102 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.