இந்திய பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டி மிதமிஞ்சிய தொடக்க விழா கொண்டாட்டத்துக்குப் பின்னர் தொடங்கியது. சின்னசாமி ஸ்டேடியத்தில் நிரம்பி வழிந்த ரசிகர்கள் கூட்டம், ஆட்டம், பொழுதுபோக்கு நிறைந்ததாக இருக்கும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், ஆட்டத்தின் போக்கு வேறுவிதமாக இருந்தது.
முதல்பாதி ஆட்டத்தின் முடிவிலேயே ஆட்டத்தின் முடிவு எப்படியிருக்குமென்பது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. பெங்களூர் அணிக் கப்டன் ராவிட் ஆடுகளத்தின் உதவியுடன் தனது அணி வேகப்பந்து வீச்சாளர்கள் விக்கெட்டை சாய்ப்பார்கள் என்ற எதிர்பார்ப்புடன் களத்தடுப்பைத் தேர்வு செய்தார். ஆனால், அணியின் ஒட்டுமொத்த திட்டத்தையும் மெக்கலம் தனது அபாரமான ஆட்டத்தின் மூலம் சிதறடித்துவிட்டார்.
அவர் வெறி பிடித்தவர் போல் ஆடினார். தனி ஒருநபர் ஆட்டம் போல் போட்டியை அவர் மாற்றிவிட்டார். அவரது ஆட்டம் எல்லாவற்றையும் விட ஒரு படி மேலிருந்தது. சகீர்கான் தனது அனுபவத்தை எல்லாம் பயன்படுத்தி பந்து வீசினார். அவர் இருந்த நிலையில் யார் பந்து வீசினாலும் வெளுத்து வாங்கத்தான் செய்வார். இதுபோன்ற ஆட்டம் வாழ்க்கையில் எல்லா நேரமும் அமையாது. மெக்கலமின் ஆட்டத்தால் தான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 200 ஓட்டங்களைக் கடக்க முடிந்தது.
ரோயல் சலஞ்சர்ஸ் அணி அதிக ஓட்டங்களைக் குவிக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் ஆடியது. ஆனால், அந்த அணியின் முன்னணி வீரர்கள் குறுகிய நேரத்தில் ஆட்டமிழந்து களத்திலிருந்து வெளியேறினார்கள்.
மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் திண்டாவின் பந்து வீச்சு பாராட்டும் விதத்தில் இருந்தது. அவர் நல்ல கட்டுக்கோப்புடன் பந்து வீசினார். ரோயல் சலஞ்சர்ஸ் அணியில் டிராவிட், ஜாபர், கலிஸ் போன்ற சிறந்த துடுப்பாட்ட வரிசை உள்ளது.
இவர்கள் அனைவரும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் நன்கு ஆடக்கூடியவர்கள். 20 ஓவர் போட்டியில் வெற்றிபெற வேண்டுமென்றால் அவர்கள் தங்கள் துடுப்பாட்ட அணுகுமுறையை மாற்றி கொள்ள வேண்டும்.
பெங்களூர் அணி உள்ளூர் ரசிகர்கள் மத்தியில் 100 ஓட்டங்களைக் கூட எட்டாமல் ஆட்டமிழந்தது மிகுந்த ஏமாற்றமளித்திருக்கும். 223 ஓட்டங்களை சேசிங் செய்வது என்பது எளிதான காரியமல்ல. அதேநேரத்தில் ரோயல் சலஞ்சர்ஸ் அணியினர் திட்டமின்றி ஆடுவது போல் தெரிந்தது.
தொடக்க ஆட்டம் எதிர்மறையான கிளைமக்ஸாகக இருந்தது. இது உள்ளூர் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கும். சின்னசாமி ஸ்டேடியத்தில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தமை அணிக்கு மட்டுமன்றி, அதன் உரிமையாளர்களுக்கும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கும். ரசிகர்கள் தொடர்ந்து ஸ்டேடியத்துக்கு வர வேண்டுமென்றால் உள்ளூர் மைதானத்தில் அணி நன்றாக விளையாட வேண்டும்.
ரசிகர்களுக்கு நல்ல பொழுதுபோக்கு அளிக்கும் விதத்தில் ஐ.பி.எல். போட்டி தொடங்கியிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. அதற்கு ஏற்றாற்போல் மெக்கலம் பவுண்டரி, சிக்சர் என்று பட்டையைக் கிளம்பியுள்ளார். கொல்கத்தா அணி வெற்றி பெற்றதும் அந்த அணியின் உரிமையாளர் நடிகர் ஷாருக்கான் ஸ்டேடியத்தில் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இது அவருக்குப் புதிய அனுபவமாகும்.
அதேநேரத்தில், ஆட்டத்தின் முடிவு எல்லா நேரமும் தங்களுக்கு சாதகமாக இருக்காது என்பதையும் உணர்ந்துகொள்ள வேண்டும். எல்லா போட்டியிலும் மெக்கலம் இதேபோல் அடிக்க முடியாது. 2 ஆவது போட்டியில் அவர் குறைந்த ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
20 ஓவர் கிரிக்கெட் போட்டிேய அதிக பொழுதுபோக்கு அம்சம் கொண்டதாகும். இந்தப் போட்டியில் மைதானத்தில் சீருடை அணிந்த மங்கைகளை நடனமாட வைத்து கூடுதல் பொழுதுபோக்கு கொடுக்க முயற்சிப்பது சரியா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். கிரிக்கெட்டையும் நடனத்தையும் ஒரே இடத்தில் ஒரேநேரத்தில் கலந்து பொழுதுபோக்கு கொடுப்பது என்பது கஷ்டமான காரியமாகும். அவற்றுக்கென்று தனித்தனி இடமிருக்கிறது. அங்கு அது நடப்பது தான் நல்லது. கிரிக்கெட் ஆட்ட களத்தில் நடனக் கூத்துகள் தேவை தானா? என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.