பெய்ஜிங்: பிரான்ஸின் பாரிய நகரம் திபெத்தின் ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவுக்கு கௌரவப் பிரஜை என்ற அந்தஸ்தை வழங்குவதற்கு எடுத்துள்ள முடிவு ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கையென சீனா தெரிவித்துள்ளது.
இந்நடவடிக்கையை தவிர்க்குமாறு கோரிக்கை விடுத்துள்ள சீனாவின் வெளியுறவு அமைச்சு இம் முடிவு மாற்றப்படாவிட்டால் அது சீன - பிரான்ஸ் உறவுகளைப் பாதிக்குமென எச்சரித்துள்ளது.
திபெத்திற்காக பல பிரெஞ்சு அதிகாரிகளும் நிறுவனங்களும் தமது ஆதரவை வெளிப்படுத்தி வரும் நிலையில், இந்த நெருக்கடி சீனாவுக்கும் பிரான்ஸுக்குமிடையே ஏற்பட்டுள்ள மிகச் சமீபத்திய கருத்து வேறுபாடாகும்.
பிரான்ஸின் வெளியுறவு அமைச்சு இந்த விடயத்தில் அமைதி காக்குமாறும் பேச்சுவார்த்தை நடத்துமாறும் கோரியுள்ளது.
இந்நிலையில் சில முன்னோடி பிரெஞ்சு நிறுவனங்கள் சீனாவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் புறக்கணிப்பு கோரிக்கைகளையும் எதிர்கொண்டிருக்கின்றன.
"இதேவேளை, திபெத் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண அமெரிக்கா உதவ வேண்டுமென தலாய் லாமா கேட்டுக் கொண்டுள்ளார்.
அண்மையில் தன்னை சந்தித்த திபெத்துக்கான அமெரிக்க சிறப்பு தூதர் பௌலாவிடம் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
தலாய் லாமாவை சந்தித்துப் பேசிய விபரங்களை பௌலா, வாஷிங்டனில் வெளியிட்டபோது இதனை தெரிவித்தார்.
திபெத் பிரச்சினை தொடர்பாக தலாய் லாமாவுடன் சீனத் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது. இரு தரப்பு பேச்சுவார்த்தையை விரைவில் தொடங்க சீனத் தலைவர்களிடம் அமெரிக்கா வலியுறுத்தும். திபெத் மக்களுக்கு மத சுதந்திரம், கலாசார சுதந்திரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை உரிமைகளும் அளிக்கப்பட வேண்டும்.
கலவரத்தை கட்டுப்படுத்த தலாய் லாமாவால் மட்டுமே முடியும். எனவே, அவரிடம் சீனத் தலைவர்கள் எவ்வித நிபந்தனையும் இன்றி பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்று பௌலா தெரிவித்துள்ளார். திபெத் கலவரத்தில் இதுவரை 150 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருப்பதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. ஆனால், 18 பேர் மட்டுமே பலியாகி இருப்பதாக சீன அரசு தெரிவித்துள்ளது.