முன்னர் புலிகள் இயக்கத்தின் பிரதான வருமான மார்க்கமாக இந்த ஏ9 பாதையினூடாக நடைபெறும் வாகன மற்றும் மக்கள் போக்குவரத்து மூலமாக வரிப்பணம், கப்பம் போன்ற வசூலிப்புகளிலிருந்து புலிகள் இயக்கம் தினமும் ரூபா ஒரு கோடி ஐம்பது இலட்சத்துக்கும் மேற்பட்ட பணத்தொகையைப் பலாத்காரமாகப் பெற்றுவந்தது. அந்த வருமானம் முற்றாக இல்லாமல் போய்விட்ட நிலையிலும், கிழக்கு மாகாணத்திலிருந்து புலிகள் வசூலிக்கும் வருமானங்களை இழந்த நிலையிலும் தற்போது புலிகள் இயக்கம் வெளிநாடுகளிலுள்ள தமிழர்களிடமிருந்து வசூலிக்கும் பணத்திலும் புலிகளின் சர்வதேச கடத்தல் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளிலிருந்து பெறும் பணத்திலுமே தங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் புலிகள் இயக்கம் பெரும் பணமுடைக்குள் சிக்கியுள்ளதாகவும் வன்னி யுத்தமுனைகளில் யுத்தம் நாளாந்தம் தீவிரமடைந்து வருவதால் பொருளாதார ரீதியில் கஷ்டங்களுக்கு முகம்கொடுக்க முடியாத நிலையில் புலிகள் இயக்கத் தலைமைத்துவம் தவிப்பதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வன்னியிலுள்ள படையினரால் மீட்கப்படாத பிரதேசங்களில் புலிகள் இயக்கத்தினர் யுத்தப் பயிற்சிக்காக மக்களைக் கடத்தும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இவ்வாறு கடத்திச் சென்று இயக்கத்தில் சேர்த்துக்கொள்ளும் உறுப்பினர்களுக்காக உடைகளை மற்றும் அத்தியாவசிய தேவைகளைக்கூட புலிகள் இயக்கம் கொடுப்பதில்லை எனவும் மேலும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் புதிதாகச் சேர்த்துக்கொள்ளப்படும் உறுப்பினர்களுக்கு அவர்களுக்குத் தேவையான காற்சட்டை, சட்டை, பெனியன், றப்பர் செருப்புகள் மற்றும் உடைகள் உபகரணங்கள் எல்லாமே குறித்த உறுப்பினர்களின் வீடுகளிலிருந்தே கொண்டுவரப்படுவதாகவும் இதற்கான பொருட்பட்டியல் உறுப்பினர்கள் அவர்களின் வீடுகளுக்கு அனுப்பிவைப்பதாகவும் அதற்கேற்ப அனைத்துப் பொருட்களையும் வீட்டிலுள்ளவர்களே கொண்டு வந்து ஒப்படைக்கவேண்டுமென உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் வன்னி வட்டாரங்களிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
லங்காதீப வன்னித்தகவல்: 20/04/2008