நட்சத்திர வீரர்களை கொண்ட பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியைச் சேர்ந்த வீரர்கள் சிறப்பாக ஆடி வெற்றியை தேடித் தந்ததாக கப்டன் ஷேன் வோர்ன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
எந்த அணியையும் தங்களால் வீழ்த்த முடியுமென்றும் அவர் அதிரடியாகக் கூறியுள்ளார்.
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் திங்கட்கிழமை ஜெய்ப்பூரில் யுவராஜ் சிங் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஷேன் வோர்ன் தலைமையிலான ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் மோதின. இதில் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணி முதலில் ஆடி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 166 ஓட்டங்கள் எடுத்தது. அணியின் கப்டன் யுவராஜ் சிங் 34 பந்துகளில் 57 ஓட்டங்களை அதிரடியாக குவித்தார்.
இதனையடுத்து, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி ஆடத் தொடங்கியது. ஷேன் வாட்சனின் அபாரமான ஆட்டத்தால் அந்த அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வாட்சன் ஆட்டமிழக்காமல் 76 ஓட்டங்களை குவித்தார். அவர் 49 பந்துகளில் அதிவேகமாக ஓட்டங்களை குவித்தார்.
ராஜஸ்தான் அணி 18.1 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்த ராஜஸ்தான் அணி தனது முதல் வெற்றியை பெற்றுள்ளது. யுவராஜ் அணி தொடர்ந்து இரண்டாவது தோல்வியை சந்தித்துள்ளது.
இந்தப் போட்டிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ராஜஸ்தான் அணியின் கப்டன் ஷேன் வோர்ன், நட்சத்திர வீரர்களை கொண்ட பஞ்சாப் அணிக்கு எதிராக தமது வீரர்கள் சிறப்பாக ஆடியதாகத் தெரிவித்தார்.
ராஜஸ்தான் அணியால் எந்த அணியையும் வீழ்த்த முடியுமென்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். போதிய ஓட்டங்கள் குவிக்கத் தவறியதால் தோல்வி ஏற்பட்டதாக பஞ்சாப் அணியின் கப்டன் யுவராஜ் சிங் தெரிவித்தார். ஷேன் வாட்சன் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.