*தோனி கூறுகிறார்
ஐ.பி.எல் போட்டிகளில் எந்த அணி மிகவும் சிறப்பாக விளையாடுகிறதோ அந்த அணி வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றுமென சென்னை சுப்ப கிங்ஸ் அணியின் கப்டன் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் காலை பயிற்சி முடிந்ததும் தோனி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது;
நட்சத்திர வீரர்கள் அதிகம் அடங்கிய சென்னை அணியின் கப்டனாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவர்கள் எல்லோரும் சாம்பியன் என்று நிரூபணமானவர்கள். ஆட்டத்தில் தங்களது பங்கு என்ன என்பதை நன்கு அறிந்தவர்கள். அவர்கள் ஆட்டத்துக்கு உள்ளேயும், வெளியேயும் மதிப்புமிக்க கருத்துக்களை தெரிவிப்பார்கள். எங்கள் அணியின் துடுப்பாட்டத்துடன் ஒப்பிடுகையில் பந்து வீச்சு சற்று பலவீனமாகத்தான் தெரிகிறது.
இருப்பினும் இருக்கும் வீரர்களை கொண்டு அதனை திறம்படச் சமாளிப்போம். எங்களது பந்து வீச்சு பலவீனத்தை சிறப்பான களத்தடுப்பு மற்றும் ஓட்டம் எடுக்க விக்கெட் இடையே வேகமாக ஓடியும் ஈடு செய்வோம். மிகவும் கவனிக்கப்படும் அணியை விட நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம்.
ஆட்டத்தில் முன்னேற்றம் காண தீவிர முயற்சி எடுத்து வருகிறோம். தற்போதைய நிலையில் எங்கள் அணி நல்ல களத்தடுப்பு செய்யும் அணியாக விளங்கி வருகிறது. சரியான திசையில் நாங்கள் சென்று கொண்டிருக்கிறோம். எங்கள் அணியின் பலம், பலவீனத்தை ஆராய்ந்து எங்கள் பலத்தை பெருக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அணிக்கு இன்னும் நிறைய ஆட்டங்கள் உள்ளன. எந்த அணி சிறப்பாக விளையாடுகிறதோ? அந்த அணி தான் சாம்பியன் கிண்ணத்தை வெல்லும். தொடர்ந்து நாங்கள் எங்கள் கவனம் சிதறாமல் பார்த்துக் கொள்வோம்.
ஹைடன், பாதியிலேயே அவுஸ்திரேலிய அணிக்கு விளையாடச் சென்றால் கூட நல்ல தொடக்க ஆட்டக்காரர்கள் நமது அணியில் உள்ளனர். ஸ்ரீபன் பிளமிங் இருக்கிறார். இக்கட்டான சூழ்நிலையில் நான் இறங்கி ஆடினால் அணிக்கு அதிக பயனுள்ளதாக இருக்கும் என்று கருதுகிறேன்.
இக்கட்டான கட்டத்தில் அடித்து ஆடக்கூடிய வீரர்கள் தேவையாகும். இந்தப் போட்டியில் இந்திய வீரர்கள், இந்திய வீரருக்கு எதிராக விளையாட பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். சில நேரங்களில் இதனை ஏற்றுக் கொள்ள கடினமாக இருக்கும். டெண்டுல்கருக்கு எதிராக அதிக திட்டங்கள் எதுவும் வைக்கவில்லை. ஆனால் நாங்கள் நிச்சயமாக சிறப்பாக செயல்படுவோம். டெண்டுல்கர் ஆடுவதை பார்க்க சிறப்பாக இருக்கும்.
சர்வதேச போட்டி அட்டவணை மிகவும் நெருக்கடியாக இருக்கிறது. இதனால் எதிரணி வீரர்களை சந்தித்து பேசும் வாய்ப்பு மிகவும் குறைவாகத்தான் கிடைக்கிறது. ஆனால் ஐ.பி.எல்.போட்டி எதிரணி வீரர்களை நன்கு அறியவும், அவர்களது கலாசாரத்தை தெரிந்து கொள்ளவும், இளம் வீரர்கள் சர்வதேச வீரராக உருவெடுக்கவும் நல்ல வாய்ப்புகளை அளிப்பதாகவும் தெரிவித்தார்.