* பெரும் பீதியில் தென்னிலங்கை
சிக்குன்குன்யா, டெங்கு, எலிக்காய்ச்சல் மற்றும் அடையாளம் காணப்படாத வைரஸ் காய்ச்சல் ஆகியன இலங்கையை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்ததுடன் 20 ஆயிரம் பேர் இவற்றின் தாக்கத்திற்குட்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
தென்னிலங்கையைப் பீதியில் ஆழ்த்தியுள்ள இக்காய்ச்சலினைக் கட்டுப்படுத்த அரசாங்கம் சகல நடவடிக்கைகளையும் முடுக்கி விட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
கடந்த சில மாதங்களில் மாத்திரம் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டு 8 பேர் பலியாகியுள்ளதுடன், 2 ஆயிரத்து 359 பேர் இதன் தாக்கத்திற்கு உட்பட்டும் உள்ளனர்.
எலிக் காய்ச்சலினால் 40 பேர் பலியாகியுள்ளதுடன், ஆயிரக் கணக்கானவர்கள் இதன் தாக்கத்திற்கும் உட்பட்டு தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்வாறே சிக்குன் குன்யா மற்றும் அடையாளம் காணப்படாத வைரஸ் காய்ச்சல் என்பனவற்றினாலும் சிலர் பலியாகியுள்ளதுடன், பல ஆயிரக் கணக்கானவர்கள் இதன் தாக்கத்திற்குட்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. இதுபற்றி அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா கூறுகையில்;
இரத்தினபுரி மாவட்டத்தில் பல்வகை காய்ச்சலுக்கு உட்பட்டு 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு ஏற்பட்டுள்ள அபாயத்தை ஆராய்ந்து, நிலைமையைக் கட்டுப்பாட்டில் கொண்டுவர சிறப்பு வைத்தியர் குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக மருந்துப் பொருட்களும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள காய்ச்சலினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் முடுக்கிவிட்டுள்ளது. இதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பு அவசியமாகும் என்றார்.
இதேவேளை, அண்மையில் பெய்த மழை காரணமாகவே நுளம்புகள் பெருக்கெடுத்து காய்ச்சலுக்கு காரணமாக அமைந்ததாக தெரிவித்த சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் டாக்டர் நிஹால் அபயசிங்க நுளம்பு பரவும் சூழலை தடுப்பதே இவற்றின் தாக்கத்திலிருந்து மீளும் வழியெனவும், பொது மக்களை இதுகுறித்து அறிவூட்ட ஊடகங்களின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டதுடன், தமது உடலில் மாறுபட்ட தன்மை அல்லது அறிகுறிகளை உணருபவர்கள் அருகிலுள்ள வைத்தியரை நாடுவது அவசியமெனவும் இல்லையேல் அது உயிருக்கு பாதகமாக அமையுமெனவும் குறிப்பிட்டார்.