-ஏ.தேவராஜா-
இலங்கையில் முதல் தடவையாக நடைபெறும் ஆசிய தலைவர் கிண்ண உதைபந்தாட்ட போட்டியின் முதல்நாள் ஆட்டங்களில் ரட்ணம் கழகமும் மியன்மார் அணியும் வெற்றி பெற்றுள்ளன.
இலங்கையின் சார்பில் பங்குபற்றும் ரட்ணம் கழகத்துக்கும் பூட்டான் ரான்ஸ்போட் யுனைட்டெட் கழகத்துக்குமிடையில் நடைபெற்ற ஆட்டத்தில், ரட்ணம் கழகம் மிக இலகுவாக 7-1 கோல்களினால் வெற்றி பெற்றது.
இடைவேளையின் போது 3-1 கோல்களினால் முன்னணி வகித்த ரட்ணம் கழகம், இடைவேளையின் பின் மேலும் 4 கோல்களைப் போட்டது.
ரட்ணம் கழகத்தின் சார்பில் முன்னணி வீரர்களான சன்னா 3 கோல்களையும் அஸ்மீர், சத்துரமதுரங்க, ஹசும் ஜெயசூரிய, புஷ்பகுமார ஆகியோர் தலா ஒரு கோல்களைப் போட்டனர். இப்போட்டியில் சிறந்த வீரருக்கான பரிசு சன்னாவுக்கு வழங்கப்பட்டது.
மியன்மார் அணிக்கும் துர்க்மெனிஸ்தான் அணிக்குமிடையில் நடைபெற்ற விறுவிறுப்பான போட்டியில் ஆட்டம் முடிவடைவதற்கு ஒரு சில நிமிடங்கள் இருக்கும்போது, மியன்மார் அணி ஒரு கோலைப் போட்டு (1-0) வெற்றி பெற்றது. இக்கோலை முன்னணி வீரர் தைஹா போட்டார்.
இன்றைய ஆட்டம்
சுகததாச விளையாட்டு அரங்கில் இன்று பிற்பகல் 4 மணிக்கு நடைபெறும் 1 ஆவது ஆட்டத்தில் பூட்டான் ரான்ஸ்போட் யுனைட்டெட் கழகத்தை எதிர்த்து துர்க்மெனிஸ்தான் அணி போட்டியிடும். 6.30 மணிக்கு நடைபெறும் 2 ஆவது ஆட்டத்தில் ரட்ணம் கழதத்தை எதிர்த்து மியன்மார் அணி போட்டியிடும்.