(நேற்றைய தொடர்ச்சி)
இதெல்லாம் இப்போது தெரிந்து அவர்களுக்கு என்ன பயன் இருக்கப் போகிறது?
"பத்திரிகைகளுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.ஊடகங்களுக்குத் தேவை செய்தி மட்டுமே. அவர்களுக்கு வேண்டியது உண்மை மற்றும் தெளிவு. அது அவர்களுக்குக் கிட்டவில்லை, ஏன்? தண்டனை அனுபவிக்கும் எங்களுக்கே கண்ணைக் கட்டி காட்டில் விட்ட நிலைதான் இன்றளவும் ராஜீவ்காந்தி கொலை பற்றி எல்லாம் தெரிந்துவிட்டது. நீதிமன்றத்தால் தீர்க்கப்பட்டுவிட்டது என்று பத்திரிகைகளும், மக்களும் நம்பினால் அது உங்கள் முதுகை நீங்களே தட்டிக் கொள்ளும் செயல்தான் என்பது என் கருத்து. இந்த வழக்கில் சி.பி.ஜ.கொலைச் சதியை எப்படி நிரூபித்தது? ஹரிபாபு எடுத்த புகைப்படங்களைக் கொண்டு! `விடுதலைப்புலிகளும், அதன் தமிழக ஆதரவாளர்களும் ஒன்றிணைந்து சதி செய்து ராஜீவைக் கொன்றனர். இதற்குக் காரணம், இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி விடுதலைப் புலிகளிடமிருந்து ஆயுதங்களைப் பறிக்க முனைந்ததும், இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை அமுல்படுத்த முயன்றதும் பிரபாகரனுக்குப் பிடிக்கவில்லை.' - இதற்கு ஆதாரமாக சி.பி.ஐ.யினால் காட்டப்பட்டன பல்வேறு வரலாற்றுப் பதிவுகள். சதித்திட்டத்திற்கு ஆதாரமாகக் காண்பிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இருந்து பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம், அந்த ஒப்புதல் வாக்குமூலத்தில் சதித் திட்டம் பற்றி ஏதேனும் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறதா? என்றால், அப்படி எதுவும் இல்லை. ஒவ்வொரு ஒப்புதல் வாக்குமூலத்திலும் உள்ள ஒரே ஒரு முக்கியமான வரி, ராஜீவ் கொல்லப்படப் போவது பற்றிய சந்தேகம் முன்பே எங்களுக்குத் தெரியும் என்பது போன்ற தோற்றம் அவ்வரிகளில் தொனிக்கும் என்பதுதான். இவற்றை எழுதியது யார் என்றால், அதே சி.பி.ஐ.யைச் சேர்ந்த ஓர் அதிகாரிதான். காவல்துறையின் ஒப்புதல் வாக்குமூலம் எப்படி பெறப்படும் என்பது யாவரும் அறிந்த செய்தி. அதை பிரியங்காவும் அறியாதவரல்ல. இதில்வேடிக்கை என்னவென்றால், அதே சி.பி.ஐ.யால் வேறொரு ஆதாரமாகச் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தில், விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவு தளபதி பொட்டு அம்மான், சிவராசனுக்கு அனுப்பியதாகச் சொல்லப்பட்ட வயர்லெஸ் செய்தியில் ராஜீவ் கொலை நடவடிக்கை தங்கள் மூவரைத் தவிர, அந்த அமைப்பின் அப்போதைய இரண்டாம் கட்டத் தலைவர்களுக்கும்கூட தெரியாது என்று கூறப்பட்டுள்ளதுதான்.
அப்படியிருக்கையில், குண்டு வெடிப்பிலும், அதன்பிறகு நடைபெற்ற தேடுதல் வேட்டையிலும், கொலையில் ஈடுபட்டதாகச் சொல்லப்படும் தணு, சிவராசன், சுபா ஆகியோர் கொல்லப்பட்ட நிலையிலும், கைது செய்யப்பட்ட சாமானியர்களான அதுவும் தமிழகத்தைச் சேர்ந்த நளினி, அறிவு மற்றும் என் போன்றோர்க்கு சதி குறித்து முன்பே தெரியும் என்று சி.பி.ஐ.சொன்னதை அவராலும், அவர் குடும்பத்தாலும் எப்படி நம்ப முடியும்? இதே கேள்வியினை அல்லது சந்தேகத்தை எட்டு வருடங்களுக்கு முன், அதாவது 2000 ஆவது ஆண்டில் சோனியா குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான மோகினிகரி அம்மையார் (முன்னாள் ஜனாதிபதி வி.வி.கிரியின் மகள்)எம்மிடம் கேட்டார். அப்போது அவர் நளினியைச் சிறையில் சந்தித்துப் பேசியதோடு, ஆண்கள் மத்திய சிறையில் இருக்கும் ஏனைய ஆறு பேரையும் சந்தித்து பேசினார். அப்போதும் இதையேதான் நாம் அவர்களுக்குத் தெளிவுபடுத்தினோம்.
சி.பி.ஐ.யினர் நளினி - முருகன் காதலை கொலைச் சதிக்கு சாதகமாகப் பயன்படுத்தி, கதை பின்னி, விடுதலைப் புலிகள், அதன் ஆதரவாளர்கள்... என்பதுடன் ராஜீவ் கொலை விசாரணையின் புலனாய்வை மிகச் சுலபமாக முடித்துக் கொண்டனர். `நாட்டிற்கும், சோனியா குடும்பத்தினருக்கும் உண்மை விளங்க வேண்டுமென்றால் அனுஜா-தணு விவகாரத்தில் இந்திய அரசு அதிகாரிகள், தொடர்பில்லாத, நம்பகத்தன்மையுள்ள தடயவியல், கம்ப்யூட்டர் நிபுணர்களைக் கொண்டு மீளாய்வு செய்து. சி.பி.ஐ. கூற்றைச் சரி பாருங்கள்' என்று விளக்கினோம். இப்போதும் அதையே கூறுகிறோம்."
அப்படியானால் இந்த வழக்கில் சி.பி.ஐ.யினர் உங்களை ஏன் சேர்த்தார்கள்? நளினியின் பங்குதான் என்ன?
"நளினியைப் பொறுத்தவரை அவர் ஷ்ரீபெரும்புதூர் கூட்டத்திற்கு தணு, சுபாவிற்கு துணையாகச் சென்றது தவிர, அவருக்கு வேறு எதுவும் தெரியாது. இதற்கு முன் அவர்களுடன் வி.பி.சிங் கூட்டத்திற்கும் நளினி சென்றிருக்கிறார். நான் உள்ளிட்ட ஏனையோர்கள் சிவராசனுடன், அமைப்பு ரீதியிலான, அரசியல் கருத்துகளின் அடிப்படையிலான தொடர்பினையே மேற்கொண்டிருந்தோம். இதனாலேயே கொலைச்சதி குறித்து எங்களுக்கும் தெரியும் என்று சி.பி.ஐ. சொன்னது. இது விடுதலைப் புலிகள் குறித்தும், அதன் அமைப்பு குறித்தும் முறையான புரிதல் இல்லாமல் புனைந்துரைக்கப்பட்ட கட்டுக் கதை, செயல்பாட்டளவில் நாங்கள் சிவராசன் குழுவினருக்கு உதவினோம் என்று வைத்துக் கொண்டாலும், அதன் மூலம் குற்றத்திற்கு உடந்தையாக இருந்தோம் என்று நிரூபிக்கப்பட்டாலும் கூட, அதற்கான தண்டனை சட்டப்படி இரண்டு ஆண்டுகள் முதல் அதிகபட்சம் ஏழு ஆண்டுகள் மட்டுமே, எங்களுக்கு தூக்குத் தண்டனையும், ஆயுள் தண்டனையும் பெற்றுக் கொடுத்தது. சி.பி.ஐ.எழுதிய ஒப்புதல் வாக்குமூலத்தில் காணப்படும் `கொலை நடக்கப்போவது எங்களுக்கு முன்பே தெரியும்' என்ற ஒரு வரிதான்."
இனி உங்கள் எதிர்காலம் தான் என்ன?
"இன்னும் கேள்விக்குறியாகத் தான் உள்ளது. நாங்கள் அரசியல் கைதிகள் கிரிமினல்கள் அல்ல. கிரிமினல்களாக இருந்தால் பத்து அல்லது பதினான்கு ஆண்டுகளுக்குப் பின் விடுதலை ஆகியிருப்போம். எம் வழக்கில் அரசியல் கலந்துள்ளதால் எல்லா சட்ட சிறை விதிகளுக்கு அப்பாற்பட்டு பதினேழு ஆண்டுகள் கடந்த பின்னரும் விடுவிக்கப்படாமல் உள்ளோம். நளினிக்கு அவர் குழந்தை அரித்ராவின் நலன் கருதி சோனியா காந்தி கருணை காட்டினார். தற்போது பிரியங்காவும் நேரில் சந்தித்து பரிவுடன் பேசி அவர் விடுதலை குறித்தும் குழந்தை குறித்தும் பேசி அறிந்திருக்கிறார். ஆனால், மூத்த அரசியல்வாதியான கலைஞர் தலைமையிலான தமிழக அரசு ஜெயலலிதாவிற்கும் காங்கிரஸ் அரசியல்வாதிகளுக்கும் பயந்து நளினி உள்ளிட்ட நான்கு ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுவித்தால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்று பொய்க் காரணம் கூறி எம்மை விடுதலை செய்ய மறுக்கிறது. அரசியல் நீதி, நியாயம், சத்தியம் அனைத்தும் சாகடிக்கப்படுகின்றன. இந்த படுகொலையில் ஒளிந்திருக்கும் உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதும் அரசின் கடமைகளில் ஒன்று என்பதையும் இங்கு நினைவூட்ட விரும்புகிறேன்".
குமுதம் றிப்போட்டர்
வடக்கு, கிழக்கு மனித உரிமைகள் செயலகப் பணிப்பாளர் கருணாரட்ணம் அடிகளாரின் படுகொலையைக் கண்டித்து ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு முன்பாக நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ள ஐரோப்பியப் பாராளுமன்ற உறுப்பினர்களையும் பொதுமக்களையும் காணலாம்.