*அமெரிக்கா குற்றச்சாட்டு
வாஷிங்டன்: சிரியா அணுவாயுதத்தைத் தயாரிக்கும் தொழிற்சாலையொன்றை நிர்மாணிப்பதற்கு வடகொரியா உதவுவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.
இத்திட்டம் அமைதியான நோக்கத்தைக் கொண்டதல்ல எனத் தெரிவித்துள்ள அமெரிக்கா சிரியா தனது இரகசிய அணுவாயுத நிகழ்ச்சித் திட்டத்தை வெளிப்படுத்த வேண்டியுள்ளது அவசியமெனவும் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்க புலனாய்வுப் பிரிவான சி.ஐ.ஏ. அதிகாரிகள் காங்கிரஸ் உறுப்பினர்களும் தமது அறிக்கையை சமர்ப்பித்ததைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன்னிடம் இவ்வாறான அணுநிகழ்ச்சித் திட்டம் எதுவுமில்லை. எதுவுமில்லையென தொடர்ந்து மறுத்து வரும் சிரியா அவ்வாறான உடன்படிக்கைகள் எதனையும் வடகொரியாவுடன் மேற்கொள்ளவில்லையென மீண்டும் தெரிவித்துள்ளது.
சிரியாவின் அணுவாயுத நடவடிக்கைகள் இடம்பெறுவதாக சந்தேகிக்கப்படும் பகுதிகள் மீது இஸ்ரேல் விமானத் தாக்குதல்களை மேற்கொண்ட பின்னர் அது தனது நடவடிக்கைகளை இரகசியமான முறையில் முன்னெடுத்து வருவதாக இவ்வறிக்கை தெரிவிக்கின்றது.
மேலும், 2007 செப்டெம்பர் வரை புளூட்டோனிய உற்பத்தி வளத்தைக் கொண்டுள்ள அதன் கிழக்குப் பகுதியில் அணுஆலையொன்றை நிர்மாணிக்கும் முயற்சிகளில் சிரியா ஈடுபட்டு வந்ததாகத் தெரிவிக்கும் இவ்வறிக்கை அதன் சட்ட விரோத அணுவாயுத நடவடிக்கைகள் தொடர்பான விபரங்களை அது உலகிற்கு வெளிப்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளது.
மேலும் அதில் வடகொரியாவின் அணு நிகழ்ச்சித் திட்டம் தொடர்பிலும் அதன் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பிலும் அமெரிக்கா நீண்டகாலமாக கவலையடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, சிரியாவின் இரகசிய அணு நடவடிக்கைகள் இடம்பெறும் பகுதியில் வடகொரியர்கள் பணியாற்றிக் கொண்டிருப்பதை நிரூபிப்பதற்கான படங்களும் சி.ஐ.ஏ. அதிகாரிகளினால் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இப்பகுதியில் அருகருகே இருவர் நிற்கும் படங்களை சமர்ப்பித்துள்ள சி.ஐ.ஏ. அதிகாரிகள் இவர்கள் வடகொரிய அணு நடவடிக்கைகளுக்கான தலைமையதிகாரியும் சிரிய அணு சக்தி நடவடிக்கைகளுக்கான தலைமையதிகாரியுமாக இருக்கலாமென தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.