ஐ.பி.எல். தொடரில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் நடன அழகிகளுக்கு எதிராக மகாராஷ்டிராவில் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. `பார் டான்ஸர்கள் ' போல் ஆடுவதாகப் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்) `ருவென்ரி- 20' தொடரை இந்தியாவில் பல்வேறு இடங்களில் நடத்தி வருகிறது . போட்டியின் போது ரசிகர்களுக்கு உற்சாகமளிக்க பவுண்டரி மற்றும் சிக்ஸர் விளாசும் போது அழகிகள் நடனமாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர். இதற்கு மகாராஷ்டிராவில் பலத்த எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. நேற்று முன்தினம் நடந்த மகாராஷ்டிர சட்டசபைக் கூட்டத் தொடரில் எம்.எல்.ஏ.க்கள் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர்.
நடன அழகிகளின் ஆபாச உடைகளும் ஆட்டங்களும் இந்தியாவில் கலாசார பாதிப்பையும் சீர்கேட்டையும் ஏற்படுத்தும் வகையில் நிகழ்த்தப்படுவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மதுபான பார்களில் ஆடப்படும் நடனங்களைப்போலவே இவை அமைந்துள்ளதென்ற விமர்சனமும் எழுந்துள்ளது.
மாநில அரசு நடனத்துக்குத் தகுந்த இசைவினை உறுதி செய்யும் நடைமுறையை அளிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. பொலிஸ் கண்காணிப்பும் அவசியம் எனக் கூறப்பட்டுள்ளது.
நடிகரும் அரசியல் பிரமுகருமான சத்ருஹன் சின்கா கூறுகையில்;
"இவ்வகை நடனங்கள் கிரிக்கெட்டைக் கிண்டல் செய்வதைப்போல் இருக்கிறது. மகாராஷ்டிர அரசு மதுபான பார்களில் நடனங்களுக்குத் தடை விதித்துள்ளது . அழகிகளுக்கு வாய்ப்புத் தருவதாக உத்தேசித்தால் அவர்களுக்கு வேலை வழங்கலாம்" என்றார்.
மார்க்சிஸ்ட் தலைவர் டி.ராஜா பேட்டியளிக்கையில் `ஐ.பி.எல், கிரிக்கெட்டை வர்த்தகமயமாக்கிவிட்டது. தரக்குறைவான விடயங்கள் அரங்கேற வழிவகை செய்துள்ளது. ஒழுக்கநெறிகள் தகர்க்கப்பட இது காரணமாகலாம்.
கிரிக்கெட் வீரர்கள் பலரும் நடன அழகிகளின் பிரச்சினை தேவையற்றதென ஒதுக்கியுள்ள நிலையில், பாகிஸ்தான் அதிரடி வீரர் அப்ரிடி " நடன அழகிகளின் உடைகள் துடுப்பாட்ட வீரர்களின் கவனத்தைச் திசை திருப்புவதாக உணர்கிறேன். கிரிக்கெட்டே ஒரு நல்ல பொழுதுபோக்கு அம்சம் தான். இதுபோன்ற நடன அழகிகள் வந்து எதையும் செய்யப் போவதில்லை என்றார்.