அனில் கும்பிளே மற்றும் மகேந்திர சிங் தோனி ஆகியோரில் யார் சிறந்த கப்டன் என்னும் கேள்விக்கு சச்சின் டெண்டுல்கர் பதிலளித்திருக்கிறார்.
டெஸ்ட் அணியின் கப்டனாக மூத்த வீரர் அனில்கும்பிளே செயல்பட்டு வருகிறார். ஒருநாள் போட்டி அணிக்கு மகேந்திர சிங் தோனி கப்டனாக இருக்கிறார். சமீபத்தில் தென்னாபிரிக்காவுக்கு எதிரான 3 ஆவது டெஸ்டில் காயம் காரணமாக கும்பிளே விலகியபோது தோனி கப்டனாக செயல்பட்டு வெற்றியை தேடிக் கொடுத்தார்.
கும்பிளே மற்றும் தோனியில் யார் சிறந்த கப்டன் என்னும் விவாதம் இந்திய கிரிக்டெ் அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இது குறித்து நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் பதிலளித்துள்ளார்.
அனில் கும்பிளே மற்றும் தோனி ஆகிய இருவரில் யார் சிறந்த கப்டன் என்று கேட்கப்பட்ட போது, இருவருமே சிறந்த கப்டன்கள் என்று சச்சின் பதிலளித்துள்ளார்.
கும்பிளே பல ஆண்டுகளாக விளையாடி வருவதாகவும் அவரைப் போல் மிகச்சிலர் மட்டுமே இந்தியாவுக்காக 18 ஆண்டுகள் தீவிரமாக விளையாடியிருப்பதாகவும் சச்சின் கூறியுள்ளார். கும்பிளே உலகத்தரம் வாய்ந்த வீரர் என்றும் சக வீரர்கள் அவரை மிகவும் மதிக்கின்றனர் என்றும் சச்சின் கூறியுள்ளார்.
அதேநேரத்தில் இளம் வீரரான தோனி குறுகிய காலத்தில் மிகக்சிறப்பாக செயல்பட்டு வருவதாக கூறியுள்ளார். இருவரையும் ஒப்பிடுவது தவறு என்று கூறிய டெண்டுல்கர், இருவர் தலைமையின் கீழும் விளையாட வாய்ப்பு கிடைத்ததை நினைத்து மகிழ்வதாகவும் கூறியுள்ளார்.