நடிகை நயன்தாரா சென்னை சுப்ப கிங்ஸ் அணியின் நட்சத்திர தூதர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாக இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னை சுப்ப கிங்ஸ் அணியின் உரிமையாளரான இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் அணியை ஊக்குவிக்கும் வகையில் நட்சத்திர தூதர்களாக நடிகர் விஜயையும் , நடிகை நயன்தாராவையும் நியமித்தது.
ஒப்பந்தப்படி போட்டி நடைபெறும் நாட்களில் நட்சத்திர தூதர்கள் வீரர்களை உற்சாகப்படுத்தியும் அணி வெற்றி பெறச் செய்யும் வகையிலும் ஊக்க நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். அந்த வகையில் சேப்பாக்கத்தில் நடைபெற்ற சென்னை சுப்ப கிங்ஸ் அணியின் போட்டியின்போது நடிகர் விஜய் கலந்து கொண்டு தோனி தலைமையிலான சென்னை அணி வெற்றி பெற வேண்டுமென வாழ்த்திப் பேசினார். மேலும், மைதானம் முழுவதும் வலம் வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி பாடல்களைப் பாடினார்.
ஆனால், மற்றொரு நட்சத்திர தூதரான நயன்தாரா போட்டித் தினத்தன்று பங்கேற்காமலும் மேலும் அணிக்காக எந்தவிதமான முயற்சிகளும் எடுக்காமலும் அதற்குரிய விளக்கமளிக்காமலுமிருந்துள்ளார்.
இந்நிலையில், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் நேற்று முன்தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் சென்னை சுப்ப கிங்ஸ் அணியின் நட்சத்திர தூதர் பொறுப்பிலிருந்து நயன்தாரா நீக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நீக்கம் குறித்து நயன்தாராவிடம் விளக்கம் கேட்க முயற்சித்தபோது அது முடியவில்லை.
அவருக்கு நெருங்கிய வட்டாரங்களில் விசாரிக்கையில்;
ஐ.பி.எல். போட்டிக்கு ஒத்துழைக்க நயன்தாரா தயாராக இருந்ததாகவும் ஆனால், சரியான தகவல் பரிமாற்றம் இல்லாததால் சிக்கல் ஏற்பட்டதாகவும் மேலும் ஒப்பந்தம் எதுவும் போடவில்லை என்றும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மட்டுமே நயன்தாரா கையெழுத்திட்டிருந்ததாகவும் அதிலும் கூட படப்பிடிப்பு இல்லாத நாட்களில் மட்டுமே பங்கேற்பது என்று திட்டவட்டமாக இருந்ததாகவும் அதையும் மீறி தற்போது இந்த நிகழ்வு நடந்திருப்பதால் எதுவும் சொல்வதற்கில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.