சீனாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதையொட்டி பொது இடங்களில் புகைப்பிடிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆயிரம் பேருக்கு பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. மேலும் பொது இடங்களில் புகைபிடிப்பவர்களை கண்காணிப்பதற்காக 1,00,000 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர் என சீன சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மே 1 ஆம் திகதி முதல் இத்தடை அமுலுக்கு வருகிறது. மீறி புகைபிடிப்பவர்களுக்கு 1.4 அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்படுகிறது.
புகைபிடிக்கும் இடங்களுக்கு தகுந்தவாறு அபராதத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இடங்களுக்கு தகுந்தவாறு 143 அமெரிக்க டொலர் முதல் 714 அமெரிக்க டொலர் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.
வாடகை வாகனங்களின் டிரைவர்கள், வாகனங்களுக்குள் புகைப்பதற்கு கடந்த அக்டோபரில் தடை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. விளையாட்டு மைதானங்கள், அரச அலுவலக வளாகங்கள், போக்குவரத்து நிலையங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், ஹோட்டல்கள், இன்டர்நெற் மையங்கள் ஆகிய இடங்களில் புகைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மே 1 ஆம் திகதி முதல் புகைபிடிக்கும் பகுதிகள் மற்றும் புகைபிடிக்காத பகுதிகள் என வேறுபடுத்தப்போவதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. புகையில்லாத பசுமையான ஒலிம்பிக்கை நடத்துவதாக சீனா உறுதியெடுத்ததைத் தொடர்ந்து இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.