*மூவர் இலங்கையர்கள், 8 பேர் இந்தியர்
போலிக்கடவுச்சீட்டுகள், பிரயாண ஒழுங்குப் பத்திரங்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் சென்னை விமான நிலையத்தில் இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த 11 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கே போலியான கடவுச்சீட்டுகள், ஆவணங்களுடன் பயணம் செய்ய முயன்றதாக இவர்கள் மீது குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையர்கள் சென்னைக்கு வந்து போலி ஆவணங்களைப் பெற்றுக் கொண்டு மலேசியா அல்லது சிங்கப்பூருக்கு செல்வதாகவும் அங்கிருந்து அமெரிக்கா, கனடாவுக்கு செல்ல முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த புதன்கிழமை இரவு விமான நிலைய குடிவரவுத் துறை அதிகாரிகள் 3 இலங்கையரைத் தடுத்து வைத்துள்ளனர்.
யோகராஜா வசந்தராசன் (35 வயது) என்பவரை ரொரொன்டோவுக்குச் செல்லும் விமானத்தில் ஏறுவதற்கான அனுமதிச்சீட்டுடன் அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளனர். அவருடைய நண்பரான அச்சுதன்பிள்ளை பாலச்சந்திரனும் (35 வயது) மலேசியா செல்வதற்காக வந்தபோது தடுத்து வைக்கப்பட்டார். விமான நிலைய அதிகாரிகள் அச்சுதன்பிள்ளையை சோதனையிட்டபோது அவர் யோகராஜாவின் கடவுச்சீட்டை வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. தனது விமானத்தில் ஏறுவதற்கான அனுமதிச்சீட்டை மாற்றிக்கொண்டு ரொரொன்டோ செல்லும் விமானத்தில் ஏற அவர் முயற்சித்துள்ளார்.
மூன்றாவது நபரான தர்மராஜா தேவநாதன் (26 வயது) நவரட்ணம் பாலேந்திரன் என்பவருக்கு சொந்தமான கடவுச்சீட்டைப் பயன்படுத்தி கோலாலம்பூருக்குச் செல்ல முயற்சித்துள்ளார்.
இவர்கள் மூவரும் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் லோரன்ஸ் கிறிஸ்ரி, தி.இளவரசு ஆகிய இருவர் (சென்னைவாசிகள்) மோசடியான முறையில் இந்தியக் கடவுச்சீட்டுகளைப் பெற்றுக் கொண்டு வியாழன் இரவு கோலாலம்பூருக்குச் செல்ல முயன்றபோது விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். அதே இரவு கோலாலம்பூரிலிருந்து சென்னைக்குப் போலி ஆவணங்களுடன் திரும்பிவந்த தாரணி ஆரோக்கியம் (33 வயது), ஆரோக்கியம் (42 வயது) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இதேவேளை, வெள்ளிக்கிழமை இரவும் கோலாலம்பூரிலிருந்து சென்னைக்கு புகைப்படங்களை மாற்றி ஒட்டிக் கொண்டு பயணம் செய்த மூவர் பிடிபட்டுள்ளனர்.