*தேர்தலில் வெளிப்படுத்துமாறு ஹக்கீம் அழைப்பு
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் இங்குள்ள முஸ்லிம்களுக்கு மாத்திரமன்றி வட, கிழக்குக்கு வெளியே வாழும் முஸ்லிம்களின் `கௌரவம்' சம்பந்தமானதொன்றாகும் என்று ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
மூதூர் பொதுவிளையாட்டு மைதானத்தில் அண்மையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது;
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் முதுகெலும்பை முறிக்க முயலும் அரசின் அராஜகத்துக்கு அடிபணிந்தாலும் வட கிழக்குக்கு வெளியே வாழும் முஸ்லிம்களுடைய எதிர்காலம் இதைவிடவும் மோசமான நிலைக்குத்தள்ளப்பட்டுவிடும் என்பதையும் நாம் மனதிற்கொள்ள வேண்டும். எனவே, முழுநாட்டிலும் வாழும் சிறுபான்மை இனங்களுக்கும் இத்தேர்தல் மிகப்பிரதானமானது.
அரசாங்கத்திற்கு எமது 6 உறுப்பினர்களை மு.கா. பறிகொடுத்தது ஜே.வி.பி.யுடன் கூட்டுச் சேர்ந்து போட்டியிட்ட அரசாங்கம் அதிலிருந்து இப்போது 10 உறுப்பினர்களைப் பறித்திருக்கிறது. அரசிடம் பாராளுமன்ற உறுப்பினர்களைப் பறிகொடுத்த கட்சிகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த மு.கா. இதனால் 3 ஆவது இடத்துக்கு வந்துவிட்டது. தன்னை ஆட்சியில் அமர்த்திய ஜே.வி.பி.க்கு கூட ஜனாதிபதி இவ்வாறான கைமாறு செய்வதாக இருந்தால் அவர் எமது கட்சிக்குச் செய்த பித்தலாட்டங்கள் குறித்துப் பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்றாலும் தொடர்ந்து இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுட்டிருக்கும் இவ்வரசாங்கத்துக்கு நாம் ஆப்பு வைத்தே ஆக வேண்டும்.
மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவது பற்றிய முடிவுகள் எடுப்பதற்கு முன்பிலிருந்தே உள்ளிருந்து சதிகளை மேற்கொள்பவர்களை அடையாளம் கண்டுகொண்ட பின்னணியில் இறுதி முடிவுகளை எடுப்பதை கடைசி வரை ஒத்திப்போட்டு வந்தோம். இதன்மூலமே சதிகளை முறியடிக்க நினைத்தோம். திடீர் தௌபீக் ஜனாதிபதி அழைப்பில் இலவச ஹெலிகொப்டர் பயணம் போயிருந்த காரணத்தினால் அவர் மீது சந்தேகம் வலுத்திருந்தது.
எல்லாப் பிரதேச சபை தவி சாளர்களுக்கும் பிரதித் தவிசாளர்களுக்கும் இலவச ஹெலிகொப்டர் பயணம் கிடைக்கின்ற இக்காலத்தில் இப்படிப்போனவர்கள் தமது அரசியற் பூர்வீகத்தை மறந்திருக்கிறார்கள். ஹெலிகொப்டரில் போய் அரசுடன் இணைந்து கொண்டவர்களின் நிலை எப்படி என்பதை இத்தேர்வு முடிவுகள் வரும்போது அரசாங்கத்துக்கு நன்றாகத் தெரிந்துவிடும்.
எமக்குத் துரோகம் செய்துவிட்டுப்போன ஹிஸ்புல்லாவுக்கு இப்போது காத்தான்குடியில் பிரச்சினை வலுவடைந்துவருகிறது. மு.கா. தலைவர் முதலமைச்சர் பதவி குறித்து பேசுவதில்லையே என்று அவர் கூறிவருகிறார். மு.கா. தலைவர் போட்டியிடுகிறார் என்றால் சும்மா சில்லறைப் பதவிகளுக்கா போட்டியிடுவது? நான் மக்களிடம் ஒரு விடயத்தை சொல்லவில்லை என்றால் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று அர்த்தம். கட்சிப் போராளிகளுக்கு விளங்குகின்ற விடயத்தை மேடைகளில் வந்து நான் முழங்கித்தள்ள வேண்டும் என எதிர்பார்க்கும் இவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஆனால், ஏன் இதைப்பற்றி நான் பேசவில்லை என்பதற்குக் காரணங்கள் இருக்கின்றன. அது அரசியற் பக்குவத்தினதும் அரசியல் நேர்மையினதும் அப்பாற்பட்ட விடயமாகும். கதிரைகளுக்கு அதீத ஆசையில் தள்ளப்பட்டு நான் போட்டியிடும் தேர்தலாக இத்தேர்தலை யாரும் பார்க்கக்கூடாது. இது எமது சுயகௌரவத்துக்கான சமூகத்தின் எதிர்காலத்துக்கான தேர்தல். இத்தேர்தலில் இங்கு சில்லறை அரசியல் செய்ய முஸ்லிம் காங்கிரஸ் வரவில்லை.
தமிழ் பேசும் மக்களிடம் முரண்பாடுகளை தோற்றுவித்து அதில் குளிர் காய நினைக்கின்ற சக்திகளாகவே இன்று ஆட்சியில் இருக்கின்ற சக்திகளை இனம் கண்டிருக்கிறோம். கிழக்கு விடுவிக்கப்பட்டுவிட்டதாகக் கூறப்படுகின்ற நிலையில் நாளுக்கு நாள் இளைஞர்கள் கடத்தப்படுகின்றனர். நேற்று முன்தினம் கூட திருகோணமலையில் இருந்து 10 இளைஞர்கள் கடத்தப்பட்டிருக்கிறார்கள். மக்களிடம் பீதியை உருவாக்கி அவர்கள் மத்தியில் வேறுயாரும் தேர்தல் பிரசாரம் செய்வதை தடுப்பதே இதன் பிரதான நோக்கமாகும். கிண்ணியாவிலும் மூதூரிலும் உள்ள வீதித்தடைகளைப் பார்த்தால் கிழக்கு விடுவிக்கப்பட்டதா என்று கேள்வி எழுகிறது. மு.கா. தலைவர் கூட்டம் நடத்த வருகிறார் என்றால் ஒரு தற்கொலைக் குண்டு அங்கி எங்கிருந்தாவது கண்டுபிடிக்கப்படும் அல்லது தம்பலகாமம் பகுதியில் யாருக்கும் காயம் ஏற்படாமல் ஒரு கிளேமோர் குண்டு வெடிக்கும். அதை பாதுகாப்புப் பிரிவினர் கண்டுபிடிப்பார்கள். நல்ல அபூர்வமான கண்டுபிடிப்புகள் அண்மைக்காலமாக கண்டுபிடிக்கப்படுகின்றன.
இத்தேர்தலில் சகோதர தமிழ் சமூகம் எதிர்நோக்குகின்ற சிக்கல்களை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். சகோதரர் வரதனும் பரசுராமனும் வேட்பாளர்களாக உள்ள இத்தேர்தலில் இவர்கள் சுதந்திரமாகப் பிரசாரம் செய்ய முடியாதிருக்கிறது. தமிழ் மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திக்குமுக்காடுகின்ற நிலைமைக்கு இந்த அரசாங்கம் அவர்களைத் தள்ளியிருக்கிறது. இந்த நெருக்கடியிலிருந்து இவர்களைப் பாதுகாக்கவும் ஒரு நேர்மையான ஆட்சியில் பங்குபற்றி நன்மைகளைப் பங்கிட்டுக்கொள்ளும் பாரிய பொறுப்பு எம்மீது சுமத்தப்பட்டிருக்கிறது. இதை செய்யத் துணிவுடன் இறங்கியிருக்கின்ற எமக்கு மூதூரில் ஆரம்பத்திலேயே ஏற்படுத்தப்பட்ட நெருக்கடிகளும் முட்டுக்கட்டைகளும் அச்சுறுத்தல்களும் அடாவடித்தனங்களும் ஒடுக்கப்படுவதற்காக திரண்டிருக்கும் இந்த மண்ணில் வெற்றி நிச்சயமிருக்கிறது. கடந்த காலங்களில் தொடர்ந்தும் இக்கட்சியை ஆதரித்த இந்த மண் இத்தேர்தலில் இந்த அரசுக்கும் அதன் அடிவருடிகளுக்கும் கூட இருந்து கட்சிக்குக் குழிபறிக்க நினைத்தவர்களுக்கு சரியான பாடத்தை புகட்டும்".