|
திருகோணமலை மாவட்டத்தில் மலேரியா காய்ச்சல் பரவாமலிருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மலேரியா தடுப்பு இயக்கம் மேற்கொண்டுள்ளதாக பிராந்திய வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
உலக மலேரியா தினத்தை ஒட்டி வெளியிட்ட பத்திரிகை அறிக்கையில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது. பத்திரிகை அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; திருகோணமலை மாவட்டம் மலேரியா தொற்றுநோய் பிரதேசமாகும். கடந்த ஆண்டு இம்மாவட்டத்தில் 97 பேர் மலேரியாக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்தனர். அந்த ஆண்டில் நாட்டில் 196 பேர் மலேரியாவினால் பாதிக்கப்பட்டிருந்தனர். குச்சவெளி, மூதூர், ஈச்சிலம்பத்தை, கிண்ணியா, கோமரங்கடவல ஆகிய வைத்திய அதிகாரி பிரதேசங்கள் மலேரியாவின் தாக்கத்துக்கு ஆளாகும் அபாய பிரதேசங்களாக அடையாளங்காணப்பட்டுள்ளன. மோதல் காரணமாக உள்ளூரில் மக்கள் இடம்பெயர்ந்தமை, கடல்கோள் மீள்கட்டுமானப் பணிகளுக்கு ெவளி மாவட்டங்களிலிருந்து தொழிலாளர்கள் அதிக அளவில் திருகோணமலைக்கு வந்துள்ளமை ஆகியவையே இம்மாவட்டத்தில் மலேரியா பரவுவதற்கு முக்கிய காரணமாகும். 2008 இல் மலேரியா பரவாமலிருப்பதை உறுதி செய்யுமுகமாக, மலேரியா பரவும் ஆபத்து உள்ளதாகக் கருதப்படும் பகுதிகளில் உள்ள 13 ஆயிரம் குடும்பங்களுக்கு நுளம்பு வலை வழங்கப்பட்டுள்ளன. யுனிசெப், உலக சுகாதார ஸ்தாபனம் ஆகியவற்றின் உதவியுடன் மேலும் 7,500 நுளம்பு வலைகள் விநியோகிக்கப்படவுள்ளன. கிணறுகளில் நுளம்பு பரவுவதற்கு உதவும் லாவாக்களை அழிப்பதற்கான மீனினம் விடப்பட்டுள்ளன. மாதம் தோறும் 450 கிணறுகளில் மீன் குஞ்சுகள் விடப்பட்டுவருகின்றன. மலேரியா பரவும் ஆபத்தாகக் கருதப்படும் பிரதேசங்களில் உள்ள வீடுகளுக்கு நுளம்பை அழிக்க மருந்து தெளிக்கப்பட்டுவருகிறது. மீண்டும் மலேரியா திருமலையில் பரவாமலிருப்பதை உறுதிசெய்ய மக்களின் ஆதரவே தேவை. |