*இ.தொ.ஐ.மு. வேண்டுகோள்
தனியார்துறை ஊழியர்களுக்கு அரசாங்கம் முன்மொழியவுள்ள 20 வீத சம்பள அதிகரிப்பை தோட்டத் தொழிலாளர்களுக்கும் வழங்கும் வகையில் தோட்ட முதலாளிமார் சம்மேளனம் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் உபதலைவர் கணபதி கனகராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது;
வழமையாக தனியார்துறை தொழிலாளர்களுக்கு சம்பளவுயர்வு வழங்கப்படும்போது கூட்டு ஒப்பந்தத்தைக் காரணங்காட்டி தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்படுவதில்லை.
ஆனால், கடந்த வருடம் செய்துகொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தபோதே ஜனாதிபதியின் தலையீட்டின் கீழ் 30 ரூபா சம்பளவுயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நாளாந்தம் அதிகரித்துச் செல்லும் அத்தியாவசியப் பொருட்களின் விலையுயர்வினால் அவதியுறும் தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்போதைய நிலையில் சம்பளவுயர்வு அத்தியாவசியமாகின்றது.
இந்நிலையில் தனியார்துறையினருக்கு 20 வீத சம்பளவுயர்வினை வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதேபோல், தோட்டத் தொழிலாளர்களுக்கும் சம்பளவுயர்வை வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.