கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முடிவடைந்த பின்னர் வடமேல் மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யும் திகதி குறித்து அறிவிக்கப்படுமென அறிய வருகிறது.
மட்டக்களப்பு உள்ளூராட்சி சபைத் தேர்தல் போன்று கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலும் வெற்றியீட்டலாமென ஆளும் தரப்பு அதிக நம்பிக்கை கொண்டுள்ளது.
இந்நிலையிலேயே வடமேல் மாகாண சபைத் தேர்தலையும் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கிழக்கு தேர்தலின் பின்னர் இது குறித்த அறிவிப்பு வெளியாகுமென நம்பகமான அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
போர் வெற்றி மற்றும் அபிவிருத்தி குறித்து வடமேல் மாகாணத்தில் பிரசாரத்தை முடுக்கி விடுவதெனவும், அதற்கு மக்களின் ஆதரவு கிடைக்குமாயின் வருட இறுதிக்குள் பொதுத் தேர்தலுக்கு செல்லவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
பொதுத் தேர்தல் இவ்வருடத்தில் நடைபெறும் சாத்தியமிருப்பதை அரசாங்க உயர்வட்டாரங்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தன.
அத்துடன் வருட இறுதிக்குள் பொதுத் தேர்தலுக்குச் செல்ல அரசாங்கம் திட்டமிட்டுள்ளதை ஜே.வி.பி.கூறியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.