Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, April 27, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
 
மறுபக்கம்
 
மறுபக்கம்
நேபாளத்தில் அதி முக்கியமான அரசியல் நிகழ்வென்று கூறக் கூடிய விதமாக முடியாட்சியின் ஒழிப்பை அதன் அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் உறுதிப்படுத்தியுள்ளது. நேபாள மாஓ வாதிகளின் வெற்றி, வெறும் தேர்தல் வெற்றியல்ல. பாராளுமன்றத்தின் மூலம் வர்க்கம், இனம், மதம், சாதி, பால் என்ற அடிப்படைகளில் ஒடுக்கப்பட்ட மக்களது உரிமைகளை வென்றெடுக்க இயலாது என்பது ஒரு புறம் இருக்க ஒரு சனநாயக நாட்டில் பாராளுமன்றத்தின் மூலம் செய்யக் கூடியதைக் கூடச் செய்ய இயலாதளவுக்கு உண்மையான அரசியல் அதிகாரம் நேபாள மன்னராட்சியின் கையில் இருந்தது. நேபாள இராணுவம் அந்த அரசியல் அதிகாரத்தின் உத்தரவாதமாக இருந்தது.

1994 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் மூலம் ஆட்சிக்கு வந்த பாராளுமன்ற இடதுசாரிக் கட்சியால் எதையுமே செய்ய இயலாதது போக அந்த ஆட்சி கூடக் கலைக்கப்பட்டு மன்னராட்சிக்கு உடன்பாடான நேபாள காங்கிரஸ் அரசாங்கம் அமைத்தது. இத்தகையதொரு பின்னணியிலேயே மாஓ வாதக் கம்யூனிஸ்ட்டுக்கள் பாராளுமன்றத்திலிருந்து வெளியேறி 1996 ஆம் ஆண்டு மக்கள் யுத்தத்தைத் தொடுத்தனர்.

அப்போது அவர்கள் வலுவான ஒரு சக்தியாக இருக்கவில்லை. அவர்கள் ஒரு புறம் அரசுடன் போர் தொடுத்தனர். மறுபுறம் தங்கள் ஆதரவுப் பிரதேசங்களில் மாற்று அரசியல் அதிகாரம் ஒன்றைக் கட்சியெழுப்பினர். இந்த அதிகாரத்திற்கு ஆயுதங்களை விட அரசியல் முக்கியமானதாக இருந்தது. காணிச் சீர்திருத்தம், பண்ணையடிமை முறை ஒழிப்பு, சாதி, மதப் பாகுபாட்டுக்கு எதிரான கடும் நடவடிக்கைகள், பெண்கள் சமத்துவம் என்று ஒவ்வொரு துறையிலும் அவர்களது அக்கறை இருந்தது. அதை அவர்கள் செயலிலும் காட்டினர். கொள்கைகளை மக்களுக்கு விளக்கினர். அவற்றை நடைமுறைப்படுத்துவது பற்றி மக்களுடன் கலந்தாலோசித்தனர். மக்கள் மூலமே அவற்றை நடைமுறைப்படுத்தினர்.

கட்சியிலும் மக்கள் படையிலும் தலைமைப் பொறுப்புகளிலும் பல்வேறு மட்டங்களிலும் ஒடுக்கப்பட்ட சமூகப் பிரிவினர் இருந்தனர். யாரையும் கட்டாயப்படுத்திக் கட்சியிலோ படையிலோ சேர்க்கும் தேவை அவர்களுக்கு இருக்கவில்லை. மக்கள் அரச படைகளதும் ஒடுக்கும் வர்க்கத்தின் அடியாட்களதும் தாக்குதல்களிலிருந்து தங்களைப் பாதுகாக்க ஆயுதம் ஏந்த வேண்டியிருந்தது. தாங்கள் வென்றெடுத்த உரிமைகளைக் காத்து விருத்தி செய்ய அவர்களுக்கு அரசியல் தேவைப்பட்டது. அரசியற் தளத்திலும் சமூகத் தளத்திலும் ஆயுதப் போராட்டத்திலும் மக்களை நெறிப்படுத்தியது. வெகுசன அரசியல், வெகுசனப் போராட்டம், மக்கள் யுத்தம் என்பவற்றை முதன்மைப்படுத்தியது. ஒரு அரசியல் சிந்தனையே.

நேபாளத்தின் சனத்தொகை இலங்கையுடன் ஒப்பிடத்தக்கது. அங்கு பத்தாண்டுகளாக நாடு தழுவிய ஒரு ஆயுதப் போராட்டம் நடந்தது. அப் போராட்டத்தின் போக்கில் நாட்டின் 80 முதல் 90 சதவீதம் வரையிலான நிலப்பரப்பு மாஓ வாதக் கம்யூனிஸ்ற்றுக்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. மாஓ வாதிகள் மக்கள் யுத்தத்தின் மூலம் ஆட்சியை ஸ்தம்பிக்கச் செய்த எத்தனையோ தருணங்கள் இருந்தன. அவர்கள் அதேவேகத்தில் தொடர்ந்திருந்தால் தலை நகரமான காத்மண்டு உட்பட முழு நாட்டிலும் தமது அதிகாரத்தை நிலைநாட்ட ஓரிரு ஆண்டுகளே போதுமாயிருந்திருக்கும். இதை அப்போது ஒத்துக் கொள்ளத் தயங்கியவர்கள் இப்போது ஒத்துக் கொள்கின்றனர்.

மாஓ வாதிகள் தமது போராட்டத்தின் மூலம் பலமுறை தலைநகரைச் சுற்றி வளைத்து ஸ்தம்பிக்கச் செய்ய முடிந்ததென்றால் அவர்கள் தலைநகரைக் கைப்பற்ற முயலாதது ஏன்? பத்து வருடப் போர் பதின்மூவாயிரம் பேர்களின் உரைப் பறித்தது. அதில் பத்தாயிரம் உயிர்கள் அரச இராணுவத்தினரால் பறிக்கப்பட்டவை. போர் மூலம் தலை நகரைப் பிடிப்பதனால் மேலும் பல ஆயிரம் உயிர்கள் பலியாக நேரும் என்பது போக, சீர்குலைந்த ஒரு பொருளாதாரச் சூழலில் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் தடைப்படுவதால் இலட்சக்கணக்கான மக்கள் அல்லற்படுவர். அதற்கும் மேலாக நேபாளத்தில் குறுக்கிடுவதற்குத் தருணம் பார்த்திருந்த இந்தியாவும் அமெரிக்காவும் அங்கு சனநாயகத்தைக் காப்பாற்றுகின்ற பேரில் குறுக்கிடும் வாய்ப்பும் இருந்தது. எனவே, விடுவிக்கப்பட்ட நேபாளம் தொடர்ந்தும் பல ஆண்கட்கு உள்நாட்டுக் கலவரங்கட்கு முகம் கொடுக்க நேரும்.

நேபாளத்தின் வறுமையும் பொருளாதாரப் பின்னடைவும் அரசியல் குழப்பமும் நேபாளத்தில் அந்தியக் குறுக்கீட்டை மட்டுமன்றி நிரந்தரமான அந்நிய ஆக்கிரமிப்பையும் சாத்தியமாக்கும் வாய்ப்புகள் அதிகம் எனுபதற்குக் கடந்த பத்தாண்டுக்கால உலக நிகழ்வுகள் சான்று கூறும். அதைவிட நேபாளம் சீனாவுடனும் இந்தியாவுடனும் கொண்டுள்ள நீண்ட எல்லை அதை உலக மேலாதிக்க வல்லரசான அமெரிக்காவுக்கு முக்கியமான ஒரு பிரதேசமாக ஆக்கியுள்ளது.

நேபாள முடியாட்சி தன் இயலாமையை மூடி மறைக்கப் பாராளுமன்றத்தைக் கலைத்து முழு அதிகாரத்தையும் தன் வாசமாக்கிய போது பாராளுமன்றக் கட்சிகள் இயங்குவதற்கான வாய்ப்பே இல்லாது போயிற்று. மன்னராட்சிக்கு எதிராக அவை ஒன்றிணைந்த போதும் அவற்றால் மன்னராட்சியின் அடாவடித்தனங்கட்கு முன் தாக்குப் பிடிக்க இயலவில்லை. இச் சூழலில் மாஓ வாதிகளின் குறுக்கீடு அவர்கட்கு உதவியாக அமைந்தது. அவர்களால் மன்னராட்சிக்கு எதிராகத் தைரியமாக ஆர்ப்பாட்டங்களை நடத்த முடிந்தது. சுருங்கச் சொன்னால் ஆயுதமேந்திய புரட்சி மூலம் மாஓ வாதிகள் ஒரு சனநாயக ஆட்சியை இயலுமாக்கினர். வேறு விதமாக நேபாளத்திற்கு எவ்விதமான சனநாயக ஆட்சியும் மீண்டிருக்க இயலாது.

மன்னர் பணித்த பின்பு ஏழு பாராளுமன்றக் கட்சிகளிடையிலும் பழைய பாராளுமன்ற விளையாட்டுக்கு மீளுகிற நோக்கம் வந்து விட்டது. குறிப்பாக நேபாள காங்கிரஸ், ஐக்கிய மாக்சிச லெனினிசக் கம்யூனிஸ்ற் கட்சி என்பன தமது பாராளுமன்ற அரசியல் ஆதிக்கம் பற்றிய சிந்தனையிலே இருந்தன. மாஓ வாதிகள் அதற்கு உடன் படவில்லை. ஒரு அரசியல் நிர்ணய சபையைச் சனநாயக முறைப்படி தெரிந்தெடுத்துப் புதிய அரசியல் யாப்பொன்றை வகுத்து மக்களின் சனநாயக, அரசியல், சமூக உரிமைகளை உறுதிப்படுத்துவது அவசியம் என்று வற்புறுத்தினர். வேறு வழியின்றி ஏழு கட்சிக் கூட்டணி அதற்கு உடன் பட்டது. அதன் பின்பும் மாஓ வாதிகள் அரசியல் நிர்ணய சபையில் பெரும்பான்மை வலிமை பெற இயலாத விதமாகப் பல்வேறு சூழ்ச்சிகள் செய்யப்பட்டன.

தென் கிழக்கு நேபாளத்தின் மாதேஸி சமூகத்தினரிடையே இந்திய இந்துத்துவ விஷமிகள் கலவரங்களைத் தூண்டி விட்டனர். அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தலை இழுத்தடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறான பல `கண்டங்கள் தாண்டி' மாஓ வாதிகள் ஒரு மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளனர். ஆனால், இது ஒரு முக்கியமான திருப்பு முனையே ஒழிய இறுதி வெற்றி அல்ல.

பத்தாண்டுக்கால ஆயுதப் போராட்டத்தின் மூலம் பால் அடிப்படையிலும் இன,மத,மொழி அடிப்படையிலும் சாதி அடிப்படையிலும் இருந்து வந்த ஒடுக்கு முறைகட்கெதிரான மக்கள் இயக்கத்தை வலுப்படுத்த வேண்டியுள்ளது. பழைய நிலவுடைமையாளர்கள் தங்களது இழந்த ஆதிக்கத்திற்கு மீளப் பலவாறும் முயல்வார்கள். அது தொடர்ச்சியாக எதிர்க்கப்பட வேண்டும். அதை விட முக்கியமாக நாட்டையும் நாட்டின் பொருளாதாரத்தையும் கட்டியெழுப்புகிற பேரில் அந்நிய மூலதனம் ஆதிக்கம் செலுத்த முயலும். ஏற்கனவே நேபாளத்தில் நிலை கொண்டுள்ள என்.ஜீ.ஓ. முகவர்கள் மூலம் பல குழிபறிப்பு வேலைகள் நடைபெறும். இதனிடையே கம்யூனிஸ்ட்டுகள் தம்மைத் திரும்பத்திரும்பப் புடமிட வேண்டும்.

வேறுமனே பாராளுமன்ற அதிகாரத்தின் மீது நேபாள மாஓ வாதிகள் தங்கியிருப்பார்களேயானால் அவர்கள் இரத்தம் சிந்திப் பெற்ற வெற்றியைப் பாராளுமன்ற விவாதங்களின் சுடு காற்று அள்ளிச் சென்று விடும். மக்கள் அதிகாரத்தை மாஓ வாதிகள் எவ்வாறு வலுப்படுத்தப் போகிறார்கள் என்பது தான் நேபாளத்தின் சுபிட்சத்தை முடிவு செய்யும்.

எவ்வாறாயினும் தேசிய வாதிகளும், தலித்தியவாதிகளும் பெண்ணியவாதிகளும் பிரிந்து நின்று எல்லாரையும் பிளவு படுத்திச் சாதிக்க இயலாத விடயங்கள் பலவற்றை எல்லா முரண்பாடுகளையும் ஒரு முழுமையின் பகுதியாக வர்க்கப் போராட்டத்தினுடன் தொடர்பு படுத்திய ஒரு போராட்டப் பாதை பத்தே ஆண்டுகளிற் சாதித்துள்ளது. அதன் பாடங்கள் உன்னதமானவை.

Email this page Your Opinion Print this page
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com