பாகிஸ்தான் ஜனாதிபதி பர்வேஷ் முஷாரப்புடன் எவ்வித பிரச்சினையுமில்லையென அந்நாட்டுப் பிரதமர் யூசுப் ரஸா கிலானி தெரிவித்துள்ளார்.
எட்டு ஆண்டுகள் ஜனாதிபதி பதவி வகிக்கிறார் முஷாரப். அவராகவே முன்வந்து இராணுவத் தளபதி பதவியையும் துறந்து விட்டார். அண்மையில் பொதுத் தேர்தல் நடத்தி பாகிஸ்தானில் மீண்டும் ஜனநாயகத்தை மலரச் செய்துள்ளார். எனவே, அவரோடு எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படும் என்று தோன்றவில்லை' என்று உருது நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் யூசுப் ரஸா கிலானி தெரிவித்துள்ளார்.
தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பாராளுமன்றத்தை முஷாரப் கலைத்து விட்டால் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கும் கிலானி பதற்றமின்றி பதிலளித்துள்ளார்.
அப்படி ஒரு சூழ்நிலை ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. மக்கள் அளித்த தீர்ப்பை ஜனாதிபதி மதிப்பார் என்று உறுதியாக நம்புகின்றோம். மக்களின் நலனுக்காக அவருடன் இணைந்து பணியாற்றவே விரும்புகின்றோம் என்றார்.
ஜூன் மாதம் நடைபெறும் இடைத் தேர்தலில் ஆளும் கட்சி (பாகிஸ்தான் மக்கள் கட்சி) இணைத் தலைவர் ஆசிப் அலி சர்தாரி போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாகவும் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் அவர் பிரதமர் பதவியேற்பார் என்றும் கூறப்படுகின்றது.
இது குறித்து கிலானியிடம் கேட்ட போது நேரடியாகப் பதிலளிக்க மறுத்து விட்டார். தேர்தலில் போட்டியிட சர்தாரிக்கு முழு உரிமை இருக்கின்றது. கட்சி தான் என்னைப் பிரதமர் பதவியில் அமரச் செய்திருக்கின்றது. நான் எப்போதும் கட்சிக்கு விசுவாசமாகவே நடப்பேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடைசி முயற்சியாகத் தான் இராணுவம் களமிறக்கப்படும். இது தொடர்பாகப் பழங்குடியினத் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது. பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகளை மீண்டும் பணியில் அமர்த்தும் விவகாரத்தில் கூட்டணிக் கட்சிகளிடையே கருத்து வேறுபாடு இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.