ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீட் கார்சாய் படுகொலை முயற்சியிலிருந்து மயிரிழையில் உயிர்தப்பியுள்ளார்.
கார்சாய் கலந்து கொண்ட இராணுவ நிகழ்வொன்றின் மீது கைக்குண்டு மற்றும் துப்பாக்கிப் பிரயோகத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சம்பவ இடத்திலிருந்து கார்சாய் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை நூற்றுக்கணக்கான மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சோவியத் ஒன்றிய ஆதரவுடனான ஆட்சி முடிவுக்கு வந்து 16 வருடங்கள் நிறைவு பெறுவதை முன்னிட்டு இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இத்தாக்குதல் தமது அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டதாகவும் இதில் தமது 3 உறுப்பினர்கள் பலியாகியிருப்பதாகவும் தலிபான்களின் பேச்சாளர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இவ் இராணுவ அணிவகுப்பு நடைபெற்ற இடத்திற்கருகில் தற்கொலை அங்கிகள் மற்றும் துப்பாக்கிகளைத் தாங்கிய தமது 6 உறுப்பினர்கள் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
1992 இல் முகாஹிதீனின் சோவியத் ஆதரவு அரசிடமிருந்து காபூலைக் கைப்பற்றியதைக் குறிக்கும் தேசிய தின நிகழ்வாக காபூலின் மத்திய பகுதியில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இத்தாக்குதல் இடம்பெற்ற சமயம் தேசியகீதம் ஒலித்துக் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிகழ்வு நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டதுடன், பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் , இராணுவத் தளபதிகள் மற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகள் சூழ கார்சாய் பாரிய மேடையொன்றில் நின்று கொண்டிருப்பது காண்பிக்கப்பட்டுள்ளது.
பின்னர் சிறிது நேரத்தில் இந்நேரடி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் 2 எம்.பி.க்கள் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இச்சம்பவத்தில் இரு குண்டுவெடிப்புகளும் இடம்பெற்றதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
பலத்த பாதுகாப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வு இச்சம்பவத்தைத் தொடர்ந்து உடனடியாக இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
அண்மைய வருடங்களில் கார்சாய் அடிக்கடி படுகொலை முயற்சிகளை எதிர்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.