இலங்கையின் பாதுகாப்புத் துறையினர் ஆயுதங்கள், போர்த் தளபாடங்களை கொள்வனவு செய்வதற்காக 100 மில்லியன் டொலர்களை (இந்திய ரூபா 400 கோடி, இலங்கை ரூபா சுமார் 1100 கோடி) குறைந்த வட்டியிலான கடனாக இந்தியா வழங்கவுள்ளதாக எக்கனோமிக் ரைம்ஸ் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
குறைந்த மட்டத்திலான வளர்ச்சியடைந்த நாடுகளின் தரத்தில் இலங்கை இல்லையென்ற போதிலும், 2 சதவீத வட்டி வீதத்தில் அதிகளவு சலுகையுடன் கடனை வழங்குவதற்கு இந்தியா இணங்கியுள்ளது.
இலங்கையின் தரத்திலுள்ள நாடொன்றுக்கு கடன் வழங்கும் போது சாதாரணமாக லண்டன் வங்கிகள் வழங்கும் வட்டிவீதத்துடன் 1-2% சதவீதத்தை அறவிடுவது வழமையாகும்.
இதேவேளை, ரயில் பாதை அபிவிருத்தித் திட்டங்களுக்காக மற்றொரு தொகையாக 100 மில்லியன் டொலர்களையும் இலங்கை இந்தியாவிடமிருந்து பெற்றுக் கொள்ளவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
2008 நிதியாண்டுக்காக இரு தரப்பு வட்டி வீதம் குறைந்த சலுகைக் கடன்களை வழங்குவதற்கு 500 மில்லியன் டொலர்களையே இந்தியா ஒதுக்கீடு செய்துள்ளது. இத் தொகையுடன் ஒப்பிடும் போது இலங்கைக்கு 200 மில்லியன் டொலர்களை சலுகைக் கடனாக வழங்குவது ஒப்பீட்டளவில் பாரிய தொகையெனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடயத்தை இந்திய வெளிவிவகார அமைச்சின் முதலீட்டு வர்த்தக மேம்பாட்டுப் பிரிவு இதுவரை கையாள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் ரீதியான உணர்வுகளுக்கு இடமளிக்கும் இந்த விடயம் குறித்து அதிகாரி ஒருவரும் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.
இந்த நிதிவளத்தை விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்துக்கு முக்கியமாக இலங்கை பயன்படுத்தும்.
இந்தியாவின் இந்த நடவடிக்கையானது விடுதலைப் புலிகளை மறைமுகமாக அழிப்பதற்கான மற்றொரு முயற்சியாக நோக்கப்படுகிறது.
இந்த மாதிரியாக பாரிய அளவில் இலங்கை இராணுவத்துக்கு இந்தியா உதவும் திட்டத்தை இந்திய ஆளும் ஐக்கிய முற்போக்கு முன்னணி அரசியல் பலம் பொருந்திய பங்காளியாக இருக்கும் தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் விரும்புவதற்கான சாத்தியம் இல்லையெனக் கூறப்படுகிறது.
இதேவேளை, இந்தியாவின் முன்னணி பாதுகாப்பு விவகார ஆய்வாளர் சி.உதே பாஸ்கர் புதுடில்லியின் இந்த நடவடிக்கைக்கு சாதகமான கருத்தை தெரிவித்துள்ளார். ்கொள்கையளவில் இதற்கு நான் ஆதரவளிக்கிறேன். இலங்கைக்கோ நேபாளத்திற்கோ இராணுவ உதவி தேவைப்பட்டால் நாங்கள் தான் முதலில் செல்பவர்களாக இருக்க வேண்டும்.
இல்லாவிடில் அமெரிக்காவோ, சீனாவோ அல்லது வேறு எந்த நாடோ அந்த இடைவெளியை நிரப்பிவிடும். அவ்வாறு நடைபெற்றால் கேந்திர உபாய ரீதியாக அது பிரதிகூலமான விடயமாக எமக்கு (இந்தியாவுக்கு) அமையும் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.