வியன்னா : ஆஸ்திரியாவில் நிலத்தின் கீழ் அமைக்கப்பட்ட வீடொன்றில் தனது மகளை சுமார் 24 வருடங்கள் அடைத்து வைத்து சித்திரவதை செய்துவந்ததாக சந்தேகிக்கப்படும் தந்தையொருவர் அந்நாட்டுப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
73 வயதான இந்நபர் தனது மகள் மூலமாக மேலும் 6 பெண் குழந்தைகளைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படும் இச் சம்பவம் அந்நாட்டையே அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
நிலத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள இவ் அறை தூங்குவதற்கான, சமைப்பதற்கான வசதிகளுடன் கழிவகற்றல் வசதியினையும் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்வறையிலிருந்து ஜோசெப் எப் என்னும் பெயருடைய சந்தேக நபரின் மகளான எலிசபெத் எப் என்பவரும் அவருடனிருந்த மூன்று குழந்தைகளும் மீட்கப்பட்டுள்ளனர்.
மற்றைய 3 குழந்தைகளும் சந்தேக நபருடன் வளர்ந்து வந்ததாகவும் ஏழாவது குழந்தை பிறந்த சில மணிநேரங்களிலேயே இறந்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது 42 வயதான எலிசபெத்தும் அவரது 6 குழந்தைகளும் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த பகுதி பல அறைகளை கொண்டிருந்ததாகவும் இதற்கான வாசல் மிகச் சிறியதாக காணப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
எலிசபெத் தற்போது மருத்துவ சிகிச்சைகளை பெற்றுவரும் அதேவேளை, இவரது மூத்த மகள் கேஸ்ரின் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
1984 இல் தன்னை தேட வேண்டாமென ஒரு கடிதத்தை எழுதி வைத்து விட்டு எலிசபெத் காணாமல் போனதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், போதைவஸ்துகளைக் கொடுத்து தனது தந்தையாரே தன்னை நிலவறையில் அடைத்து வைத்ததாக எலிசபெத் தெரிவித்துள்ளார்.
இவரது மூத்த மகளான கேஸ்ரின் நோய் வாய்ப்பாட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவரது நோய் தொடர்பான விபரங்களை அறிவதற்காக தாயாரை அழைத்து வருமாறு மருத்துவர்கள் கோரியதையடுத்தே இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.