லண்டன்: கொங்கோ ஜனநாயகக் குடியரசில் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் ஐ.நா.வின் அமைதிப் படையினர் அங்குள்ள போராளிகளுக்கு ஆயுதங்களை வழங்கியதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை ஐ.நா. மூடி மறைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், தங்கம் மற்றும் யானைத் தந்தங்களை கடத்தும் நடவடிக்கையிலும் இவர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இங்கு நடவடிக்கைகளில் ஈடுபடும் பாகிஸ்தானிய மற்றும் இந்திய துருப்புகள் இந்நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக நம்பத்தகுந்த ஆதாரங்களை மேற்கோள் காட்டியே இக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
2007 இல் இவற்றில் சில குற்றச்சாட்டுக்களை ஐ.நா.விசாரித்த போதும் ஆயுத விவகாரம் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க முடியாதுள்ளதாக ஐ.நா.தெரிவித்துள்ளது.
ஆனால், சில அரசியல் காரணங்களுக்காக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுப்பதிலிருந்து தாம் தடுக்கப்பட்டதாக ஐ.நா.வின் உள்ளகத் தகவல்களை மேற்கோள் காட்டி பி.பி.ஸி.தெரிவித்துள்ளது.
கொங்கோ முழுவதும் சுமார் 17000 துருப்புக்களை ஐ.நா.அமைதி நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியுள்ளது.
2000 ஆம் ஆண்டு பெப்ரவரியிலிருந்து கொங்கோவில் நடவடிக்கைகளில் ஈடுபடும் இப் படையினர் ஸ்திரத்தன்மைக்கான நடவடிக்கைகளை அங்கு முன்னெடுத்திருப்பதுடன், ஆயுதக் குழுக்களிலிருந்து ஆயுதங்களை களையவும் ஜனநாயக ரீதியிலான தேர்தல்கள் நடைபெறவும் மீள் கட்டுமானத்திற்கும் உதவியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொங்கோவின் கிழக்குப் பகுதியில் நடவடிக்கைகளில் ஈடுபடும் பாகிஸ்தானிய துருப்புக்கள் எப்.என்.ஐ.என்னும் போராளிக் குழுவுடன் ஆயுதங்களை வழங்குவதன் மூலமாக தங்கங்களைப் பெற்று சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இதேவேளை ஹோமா நகர்ப் பகுதியில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இந்தியப் படையினரும் ஆயுதங்களுக்குப் பதிலாக தங்கம் மற்றும் போதைப் பொருட்களை பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நடவடிக்கைகளுக்கு ஐ.நா.வின் ஹெலிகொப்டர்களே பயன்படுத்தப்படுவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ஆனால், 2007 இல் பாகிஸ்தான் துருப்புக்களின் இந்நடவடிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தி விசாரணை, ஆரம்பித்த ஐ.நா.இக் குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற்கு போதியளவான ஆதாரங்கள் இல்லையெனத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அமைதிப் படையினர் போராளிகளுக்கு ஆயுதங்களை வழங்கியமைக்கு சாட்சியாக விளங்கும் ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாக பி.பி.ஸி மேலும் தெரிவித்துள்ளது.