* மேலும் அதிகளவானோர் ஆபத்தான நிலையில்
பெய்ஜிங் : சீனாவின் கிழக்குப் பகுதியில் இரு பயணிகள் ரயில்கள் ஒன்றுடனொன்று மோதியதில் 70 பேர் பலியானதுடன் 400 பேர் காயமடைந்துள்ளனர்.
தலைநகர் பெய்ஜிங்கிலிருந்து கோடைகால சுற்றுலாத் தளமான கியுங்டாவோவுக்கு பயணித்துக் கொண்டிருந்த ரயில் தடம்புரண்டு யான்ரையிலிருந்து ஷுஸோயுவுக்கு பயணித்துக் கொண்டிருந்த ரயிலுடன் மோதியுள்ளது.
பெய்ஜிங்கிலிருந்து புறப்பட்ட 10 பெட்டிகளைக் கொண்ட ரயில் உருண்டு கால்வாய்க்குள் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் அதிகளவான பயணிகள் ஆபத்தான நிலையிலிருப்பதாக விபத்து இடம்பெற்ற இடமான சாங்டோங் மாகாணத்தின் புகையிரதநிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்விபத்து உள்ளூர் நேரப்படி நேற்று அதிகாலை இடம்பெற்றதாகவும் விபத்து இடம்பெற்ற இடத்திற்கு அரசாங்க அதிகாரிகளும் மீட்புப் பணியாளர்களும் விரைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விபத்துக்கான காரணம் தொடர்பில் பல தகவல்கள் வெளிவருகின்ற போதும் உண்மையான காரணம் இதுவரை தெரியவரவில்லை.
இதேவேளை, சம்பவ இடத்திற்குச் செய்தியாளர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
1997 இல் 126 பேர் கொல்லப்பட்ட ரயில் விபத்தின் பின்னர் இடம்பெற்ற மிக மோசமான விபத்து இதுவாகும்.
விபத்து நடைபெற்ற சமயம் இரு ரயில்களும் அதிவேகத்துடன் பயணித்துக் கொண்டிருந்ததாக புகையிரத நிலைய தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒவ்வொரு மணி நேரமும் அதிகளவானோர் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் சம்பவ இடத்தில் பாரிய மீட்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
காயமடைந்தவர்களில் 70 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்படும் அதேவேளை, வெளிநாட்டவர் எவரும் இதில் பலியாகவில்லை எனவும் பிரான்ஸ் நாட்டவர் நால்வர் எலும்பு முறிவுக்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புகையிரதத்துறை அமைச்சர் மற்றும் துணைப் பிரதமர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உதவுவதற்காகவும் அவர்களுக்கு ஆறுதல் கூறுவதற்காகவும் 1500 உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்றை அரசாங்கம் அனுப்பிவைத்துள்ளதாக அரச செய்திச்சேவை தெரிவித்துள்ளது.