*யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா
தமிழ்த் தேசிய இனம் இன்று ஓர் நெருக்கடியான காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றது. நாளை எம்மக்களுக்கு இதைவிடப் பெரிய அவலங்கள் ஏற்படலாம். அரசாங்கம் தமிழ் மக்களின் விடுதலை உணர்வை முற்று முழுதாக நிர்மூலமாக்குவதற்கு போரை கொடூரமாகக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. எமது இளைஞர்கள், தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டுமென்பதற்காக தாங்கள் உயிர்களை இந்த மண்ணின் விடுதலை வேள்விக்காக செய்த தியாகம் வீண் போகக் கூடாது. எனவே, நாம் எத்தகைய இடர்வரினும் ஒன்று பட்ட இனமாக, விடுதலைக் கனலை நெஞ்சிலே சுமந்து எமது சுதந்திரத் தியாகத்துக்காக எதனையும் ஏற்க ஒன்றுபட்டு நிற்போம்.
இவ்வாறு யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நல்லூர் இளம் கலைஞர் மன்றத்தில் இடம்பெற்ற இலங்கை தமிழர் ஆசிரியர் சங்க இணைப் பொதுச் செயலாளர் அமரர் தம்பிப்பிள்ளை பஞ்சலிங்கம் அமரத்துவம் அடைந்த முப்பத்தோராவது நாளையொட்டிய நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வுக்கு சரா. புவனேஸ்வரன் தலைமை தாங்கினார்.
பராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தொடர்ந்தும் உரையாற்றுகையில்;
"எமது மக்களின் விடுதலைப் போராட்ட உணர்வை உலக நாடுகள் நன்கு அறிந்துள்ளன. நாளை என்ன நடக்கப் போகின்றது என யாரும் கட்டியம் கூற முடியாது. எமது இனம் என்றைக்கும் சமபலமுள்ளதாக இருந்தால் தான் எமது இலட்சியத்தை வென்றெடுக்க முடியும். ஒரு சுதந்திரமான தாயகம் எமக்குக் கிட்டும் வரை நாம் சுதந்திரக்காற்றை சுவாசிக்க முடியாது.
அமரர் பஞ்சலிங்கம் இலங்கை தமிழர் ஆசிரிய சங்கத்தின் சிறந்த தலைமைத்துவப் பண்பு மிக்க தொழிற்சங்க வாதியாக சிறப்பாகச் சேவையாற்றியவர். அவருடைய போராட்ட உணர்வுகளை நாம் அறிவோம். எமது மக்களின் அவலங்களை வெளியுலகிற்குக் கொண்டு வருவதில் அவருடைய பணி அளவிடற்கரியது. அன்பினால் எதையும் சாதித்தவர். மொழிவழித் தொழிற்சங்கமாக தமிழர் ஆசிரியர் சங்கத்தின் போராட்டங்களில் முனைப்பாக செயற்பட்டு பல வெற்றிகளை ஈட்டிக் கொடுத்தவர். இனத்தின் விடுதலையே அவரது இலட்சியமாக இருந்தது. அவரது பணி யாழ்ப்பாணம், திருகோணமலை, மலையகம், மன்னார், மட்டக்களப்பு என தமிழர் வாழுமிடமெல்லாம் பரந்துவிரிந்து நின்றது. அவர் காலமாகிவிட்டார் என்ற செய்தி மகாசிவம் மூலம் கிடைத்தது. நல்ல துடிப்பான தொழிற்சங்கவாதிக்கு தற்போதைய காலத்து அவல மரணமாக இருக்குமோவென கலங்கிய போது அவருக்கு இனம் காண முடியாத நோயினால் மரணம் சம்பவித்ததாக அறிந்த போது ஆறுதல் அடைந்தேன்.
அவரிடம் இருந்த சிறந்த தலைமைத்துவப் பண்புகள் அவரை தொழிற்சங்க ரீதியிலும் தான் வகித்த பதவியிலும் சிறப்பான பணிகளை முன்னெடுக்க வைத்தது. அவரால் பல பணிகள் அவரது அரியாலைக் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அவர் எம்மைப் பிரிந்தாலும் அவரது பணி தொடர வேண்டும். நல்ல சிந்தனையாளனை, மக்கள் பணியாளனை, சிறந்த தொழிற்சங்கவாதியை இழந்து விட்டோம்" என்றார்.
நிகழ்வில் பலரும் அஞ்சலியுரையாற்றினர். நிகழ்வையொட்டி "பஞ்சதீபம்" நூல் ஒன்றும் வெளியிடப்பட்டு சகலருக்கும் வழங்கப்பட்டது.