*காத்தான்குடி ஜம் இய்யதுல் உலமா அறிக்கை
கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் மிக நெருக்கமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இரு இனங்களினதும் வாழ்க்கை அமைப்பு ஓர் இனத்தை விட்டு மற்றைய இனம் பிரிந்துபோக முடியாதவாறு அமைந்திருக்கிறது. தமிழ்ப் பிரதேசங்களும் முஸ்லிம் பிரதேசங்களும் அடுத்தடுத்து அமைந்துள்ளன. தமிழ் மக்கள் முஸ்லிம் பிரதேசங்களிலும் முஸ்லிம் மக்கள் தமிழ் பிரதேசங்களிலும் தமது தொழில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்ப் பாடசாலைகளில் முஸ்லிம் ஆசிரியர்களும் முஸ்லிம் பாடசாலைகளில் தமிழ் ஆசிரியர்களும் கணிசமான அளவு கடமை புரிகின்றனர். அரச அலுவலங்களிலும் இதேநிலை தான் காணமுடிகிறது.
இவ்வாறான வாழ்க்கை அமைப்பு இம் மாகாணத்தில் முஸ்லிம்களையும் தமிழர்களையும் பின்னிப் பிணைத்திருக்கின்றது. இந்நிலையில் இம் மாகாணத்திலுள்ள தமிழர்களும் முஸ்லிம்களும் ஒருவரையொருவர் பகைத்து வாழ ஒருபோதும் விரும்புவதில்லை என காத்தான்குடி ஜம் இய்யதுல் உலமா கிழக்கு மாகாண தேர்தல் தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
துரதிர்ஷ்டவசமாக சில சந்தர்ப்பங்களில் விரிசல்கள், பிளவுகள் ஏற்பட்டிருந்தாலும் கூட அவை இரு சமூகத்தாரையும் சார்ந்த முக்கியஸ்தர்களது முயற்சியால் சீர்செய்யப்பட்டுள்ளன. இதனால் தற்போது இரு சமூகத்தாரும் மிகுந்த இணக்கத்துடன் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெறுகின்றது. இத் தேர்தல் முஸ்லிம்களும் தமிழர்களும் தனித்தனியாப் பிரிந்து நின்று பிளவுபட்டு முட்டி மோதிக்கொள்கின்ற ஒரு தேர்தலல்ல. மிகுந்த அர்ப்பணிப்புடன் கட்டிக் காக்கப்பட்டு வருகின்ற தமிழ்- முஸ்லிம் நல்லுறவிற்கு குந்தகம் ஏற்படுத்தக் கூடியதாக இத்தேர்தல் அமைந்து விடக்கூடாது.
இத் தேர்தலில் தமிழர்களும் முஸ்லிம்களும் போட்டியிடுகின்றனர். இவர்களில் தெரிவுசெய்யப்படுவோர் மாகாணசபையை நிர்வகிக்கப்போகின்றனர். இரு சமூகத்தாரும் தாம் விரும்பியவர்களுக்கு வாக்களித்து தத்தமது பிரதிநிதிகளைத் தெரிவுசெய்யப்போகின்றனர். தெரிவுசெய்யப்படுபவர்களில் முஸ்லிம்களும் இருப்பர். தமிழர்களும் இருப்பர். எல்லோரும் இணைந்துதான் கிழக்கு மாகாணத்தை நிர்வகிக்க வேண்டும்.
எனவே, எல்லாச் சந்தர்ப்பங்களிலும் தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை உறுதியாகப் பேணப்பட வேண்டும். தேர்தல் களத்தில் குதித்திருப்பவர்கள் இதற்கேற்ப செயற்பட வேண்டும். ஒவ்வொரு சமூகத்திலும் சிவில் சமூக அமைப்புக்கள் இருக்கின்றன. சமய, சமூக நிறுவனங்கள் உள்ளன. இவையும் மிகவும் அவதானமாக இருந்து இரு சமூகங்களுக்கிடையில் எவ்வித பிணக்குகளும் ஏற்பட்டு விடாதவாறு கண்காணிக்க வேண்டும்.
மிகவும் சிரமப்பட்டுக் கட்டிக் காக்கப்பட்டு வரும் தமிழ்-முஸ்லிம் நல்லுறவு தற்காலிக நிகழ்வான தேர்தல் மூலம் குலைந்துவிடக் கூடாது. அவ்வாறு குலைந்துபோகாமல் பாதுகாப்பதை சம்பந்தப்பட்டவர்கள் உறுதி செய்ய வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்-முஸ்லிம் நல்லுறவைப் பேணுவதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் பொறுப்பு வாய்ந்த நிறுவனமென்ற வகையில் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா நடக்கவிருக்கும் மாகாண சபைத் தேர்தல் தமிழ்- முஸ்லிம் நல்லுறவைக் குலைத்துவிடக் கூடாது என்பதில் மிகுந்த அவதானம் செலுத்துகின்றது. இதன் காரணமாகவே இந்த முக்கியமான அறிக்கையை விடுக்கின்றது. எனவே, இதில் கூறப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை அனுசரித்து நடக்குமாறு காத்தான்குடி ஜம் இய்யதுல் உலமா சம்பந்தப்பட்ட அனைவரையும் வினயமாகக் கேட்டுக்கொள்கிறது.