வெள்ளம் மற்றும் மண் சரிவால் பலியானவர்களின் மரணச் சடங்குகளுக்கு தலா 15 ஆயிரம் ரூபா வழங்கப்படவுள்ளதாக அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி தெரிவித்துள்ளார்.
தற்போது பெய்துவரும் கடும் மழை காரணமாக வெள்ளம் மற்றும் மண்சரிவினால் இதுவரை ஏழு பேர் பலியாகியுள்ளதுடன் பலர் இடம்பெயர்ந்துள்ளனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கான நடவடிக்கைகளை நாம் அந்தந்த மாவட்டங்கள் ஊடான அனர்த்த முகாமைத்துவ நிலையமூடாக மேற்கொண்டு வருகின்றோம்.
இதுவரை எமது அமைச்சினூடாக இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களின் நிவாரண நடவடிக்கைகளுக்காக அம்மாவட்டங்களின் அரச அதிபர்கள் கோரியதற்கு இணங்க முறையே 5 மற்றும் 4 இலட்சம் ரூபாவை வழங்கியுள்ளோம்.
அதுபோல் மேற்படி அனர்த்தங்களில் பலியானவர்களின் மரணச் சடங்குகளுக்கு தலா 15,000 ரூபாவை வழங்கியுள்ளதுடன் பாதிக்கப்பட்ட ஏனைய மாவட்ட அரச அதிபர்கள் தமது நிவாரண நடவடிக்கைகளுக்குத் தேவையான நிதியை இதுவரை எம்மிடம் கோரவில்லையாயினும் கோரப்படும் நிதியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.
ஹொரணவில் பலியான 6 பேரின் மரணச் சடங்குக்கான நிதியை நாம் நேற்று திங்கட் கிழமை களுத்துறை மாவட்ட அரச அதிபர் கோரியதையடுத்து உடனடியாக வழங்கியுள்ளதுடன் ஏனைய பகுதிகளில் பலியானவர்களின் மரணச் செலவுக்கான நிதி எம்மிடம் கோரப்படாத நிலையில் ஏற்கனவே அனர்த்தங்களுக்காக அம்மாவட்டங்களுக்கு வழங்கப்பட்ட நிதி மூலம் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.