மடு தேவாலயத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மோதல்கள் இடம்பெறாதென அரசாங்கமும் விடுதலைப்புலிகளும் எழுத்து மூலம் உறுதிமொழியை வழங்குவார்களாயின் திருச்சொரூபம் மடு தேவாலயத்திற்கு கொண்டு வரப்படுமென மன்னார் குரு முதல்வர் வண.பிதா விக்டர் சோசை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்; மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப் தலைமையில் 30 குருக்கள் அடங்கிய குழுவினர் மடு அன்னையின் திருச்சொரூபத்தை மீண்டும் தேவாலயத்திற்கு கொண்டு வருவது குறித்து திங்கட்கிழமை கலந்துரையாடினர்.
இக்கூட்டம் பிற்பகல் 3 மணிக்கு நடைபெற்றது. இதில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்று, மடு ஆலய வளாகத்தை மீண்டும் பிரார்த்தனை செய்வதற்கு ஏற்ற இடமாக மாற்றுவதற்கும் சுத்தப்படுத்துவதற்கும் 3 குருக்கள் மற்றும் 3 தொண்டர்கள் அடங்கிய குழுவினரை அங்கு தங்கவைப்பதற்கு இராணுவத்திடம் அனுமதி கோருவது.
இரண்டாவது, ஏற்கனவே 1982 ஆம் ஆண்டு வர்த்த மானியில் மடு ஆலய உற்சவ காலங்களில் அப்பகுதியை அமைதிப் பிரதேசமாக பிரகடனப்படுத்தியுள்ள நிலையில் அதனை நிரந்தர அமைதிப் பிரதேசமாக பிரகடனப்படுத்த வேண்டுமென்பது.
இதற்கமைய மடுதேவாலயத்தை சுற்றியுள்ள இரு கிலோமீற்றர் சுற்றளவுப் பகுதியையே இவ்வாறு பிரகடனப்படுத்தி அங்கு, இடம்பெயர்ந்துள்ள அகதிகளை மீளக்குடியேற்றி எதிர்காலத்தில் மோதல்கள் இடம் பெறமாட்டாதென அரசாங்கமும் விடுதலைப்புலிகளும் எழுத்துமூலம் உறுதிமொழி வழங்க வேண்டும். இதன் பின்னரே அன்னையின் சொரூபத்தை மடு தேவாலயத்திற்கு கொண்டு வருவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.