பாரதூரமான மனிதஉரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தொடர்பாகவும், மனித உரிமை துஷ்பிரயோகங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்குரிய அரசியல் துணிச்சல் இலங்கை அரசாங்கத்திடம் இல்லையெனவும் முன்னர் தெரிவித்திருந்த கருத்துக்களை இந்திய முன்னாள் தலைமை நீதிபதியும் சர்வதேச சுயாதீன மாண்புமிக்கோர் குழுவின் தலைவருமான பி.என். பகவதி வாபஸ் பெற்றுள்ளார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு கடந்த 26 ஆம் திகதி அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தின் மூலம் முன்னைய நிலைப்பாட்டை பகவதி வாபஸ் பெற்றுள்ளமை வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தின் உள்ளடக்கம் வருமாறு:
தங்களைச் சந்திப்பதற்கு சர்வதேச சுயாதீன மாண்புமிக்கோர் குழுவின் உறுப்பினர்களான எனக்கும் சேர் நைஜல் ரொட்லிக்கும் பேராசிரியர் ஜொகொட்டாவுக்கும் வாய்ப்பளித்தமை தொடர்பாக நன்றி தெரிவிக்கிறேன்.
இந்தச் சந்திப்பில் சர்வதேச சுயாதீன மாண்புமிக்கோர் குழுவின் பகிரங்க அறிக்கை தொடர்பாக எழுந்த சில விடயங்கள் தொடர்பாக கலந்தாராய்வதற்கும் விளக்கமளிப்பதற்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.
பகிரங்க அறிக்கையிலுள்ள பிரதான விடயங்களில் ஒன்றாக இலங்கை அரசாங்கத்திடம் ்அரசியல் விருப்பம் இல்லை' என்பது தொடர்பான விடயம் சந்திப்பின் போது கலந்தாராயப்பட்டது.
பகிரங்க அறிக்கையில் சம்பந்தப்பட்ட பகுதி மீது கவனம் செலுத்துமாறு நான் தங்களிடம் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தாங்கள் அந்தப் பகுதியை பார்த்தீர்களானால் சர்வதேச சுயாதீன மாண்புமிக்கோர் குழுவானது இலங்கை அரசாங்கம் மீது குற்றச்சாட்டியிருக்கவில்லை என்பதை தாங்கள் கண்டுகொள்ள முடியும்.
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பாக இதுவரை இலங்கை அரசாங்கத்திடம் அரசியல் விருப்பம் போதாமலிருக்கின்றது என்ற குற்றச்சாட்டை மாண்புமிக்கோர் குழு தெரிவித்திருக்கவில்லை.
்அரசியல் விருப்பம் இல்லாமை தொடர்பாக சர்வதேச சுயாதீன மாண்புமிக்கோர் குழுவினர் கொண்டிருக்கும் எதிர்காலம் தொடர்பான அச்சம் என்றே பகிரங்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இலங்கை அரசின் தரப்பில் அரசியல் ரீதியான விருப்பம் இல்லை என்று மாண்புமிக்கோர் குழு ஒருபோதும் குற்றச்சாட்டு தெரிவித்திருக்கவில்லை. தம் முன்னால் இருக்கும் உண்மைகளின் அடிப்படையில் சர்வதேச சுயாதீன மாண்புமிக்கோர் குழுவானது எதிர்காலம் தொடர்பான அச்சம் குறித்து வெளிப்படுத்திய குரல் மட்டுமே இதுவாகும்.
எதிர்காலம் தொடர்பான அச்சத்தை தவிர அதற்கு மேலாக சர்வதேச சுயாதீன மாண்புமிக்கோர் குழுவால் வெளிப்படுத்த முடியாதென்பது நிச்சயமானதாகும். ஏனெனில், இலங்கை அரசாங்கத்திடம் அரசியல் விருப்பு உள்ளதா? இல்லையா? என்பதை கண்டுபிடிப்பதற்கான சட்ட நியாயாதிக்கம் குழுவுக்கு இல்லை.
விசாரணை ஆணைக்குழுவின் விசாரணையானது வெளிப்படைத் தன்மையுடன் காணப்படுகின்றதா என்பது பற்றியும் சர்வதேச விதிகளுக்கு ஏற்புடையதாக இருக்கின்றதா என்பது குறித்தும் அவதானிப்பதுடன் குழுவின் பணி மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
விசாரணை ஆணைக்குழு சம்பந்தமாக இதுவரை அக்குழு சிறப்பான பணியை மேற்கொண்டு வருகிறது. அதன் தலைவர், உறுப்பினர்களிடமிருந்து சர்வதேச சுயாதீன மாண்புமிக்கோர் குழுவுக்கு சிறந்த ஒத்துழைப்பு கிடைத்துள்ளது. விசாரணை ஆணைக்குழு தனது பணியை முன்னெடுக்கும் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. இலங்கை அரசுக்கும் விசாரணை ஆணைக்குழுவுக்கும் எனது நல்வாழ்த்துக்கள் என்று பகவதி கூறியுள்ளார்.