* அமைச்சர் சமரசிங்க மகிழ்ச்சி
சர்வதேச சுயாதீன மாண்புமிக்கோர் குழுவின் தலைவரும் இந்திய முன்னாள் தலைமை நீதிபதியுமான பி.என்.பகவதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதம் மூலம் இலங்கைக்கு `நற்சான்றிதழ்' கிடைத்துள்ளதாக மனித உரிமைகள் விவகார அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.
இடர்முகாமைத்துவ, மனித உரிமைகள் அமைச்சில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது,
பகவதி தலைமையிலான சர்வதேச சுயாதீன மாண்புமிக்கோர் குழு (IIGEP) இலங்கை மீது பல குற்றச்சாட்டுகளை முன்னர் சுமத்தியிருந்தது. சட்டமா அதிபர் திணைக்களம் மீதும் விமர்சனத்தை முன்வைத்தது. அத்துடன் தமது அவதானிப்புப் பணியிலிருந்தும் விலகியது.
இவ்விவகாரம் உள்நாட்டு வெளிநாட்டு ஊடகங்களில் பிரபல்யமானது. நிபுணர் குழுவின் அறிக்கையும் கூற்றுக்களும் நாட்டுக்கு அவப்பெயரை தேடித்தருவதாக அமைந்தது. இதற்கு இலங்கை அரசாங்கம் பலத்த கண்டனத்தை வெளிப்படுத்தியது.
இந்நிலையில் கடந்தவாரம் இலங்கைக்கு வருகைதந்த பகவதி இங்கு ஊடகவியலாளர் மாநாட்டையும் நடத்திவிட்டு, ஜனாதிபதியையும் சந்தித்திருந்தார். இதன் போது எமது ஜனாதிபதி அவருக்கு பலவிடயங்களை தெளிவுபடுத்தினார்.
இதையடுத்து இந்தியா சென்ற பகவதி கடந்த 26 ஆம் திகதியிட்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பிய கடிதத்தில் பல விடயங்களை (சாதகமாக) கூறியுள்ளார். இது அவர் முன்னர் தெரிவித்த கருத்துகளை பிரதிபலிப்பதாக அமையவில்லை.
எனவே ஜனாதிபதிக்கு பகவதி அனுப்பிய கடிதம் மூலம் இலங்கைக்கு நற்சான்றிதழ் கிடைத்துள்ளது. இதனால் இலங்கை அரசாங்கம், சட்டமா அதிபர் திணைக்களம் மீதான குற்றச்சாட்டுகள் நீங்குகின்றன என்றார்.
இங்கு கருத்துத் தெரிவித்த சட்டமா அதிபர் சீ.ஆர்.டீ.சில்வா ;
"சர்வதேச சுயாதீன மாண்புமிக்கோர் குழு விசாரணைகளை கண்காணிக்கவே இங்கு வந்தது. எனினும் அவர்கள் தமது வரம்புகளை மீறி அறிக்கை வெளியிட்டபோதும், தற்போது தமது நிலைப்பாட்டை மாற்றியுள்ளனர். இதுவே யதார்த்தமாகும். இது எமது நாடடுக்கு நற்பெயரைத் தேடித்தரும்" என்றார்.