பிரிட்டஷ் அரசாங்கம் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சர்வதேச பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றாகப் பட்டியலிட்டு புலிகள் இயக்கத்தின் செயற்பாடுகளையும் அதற்கு ஆதரவான அமைப்புகளின் செயற்பாடுகளையும் பிரிட்டனில் சட்டபூர்வமாகத் தடைசெய்துள்ளபோதும் புலிகள் இயக்கத்துக்குச் சார்பான கூட்டங்கள், கருத்தரங்குகள், மாநாடுகள் போன்ற பகிரங்க நிகழ்வுகள் தொடர்ந்தும் பிரிட்டனில் நடைபெற்றே வருகின்றன. மேலும், இந்த நிகழ்வுகளில் பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பல்வேறு பிரிட்டிஷ் அரசியல் மற்றும் சமூகப் பிரமுகர்கள் கலந்துகொள்கின்றனர்.
இவ்வாறு பிரிட்டனில் தடை செய்யப்பட்ட அமைப்புக்குச் சார்பாக பகிரங்கமாக நிகழ்வுகள் நடத்துவதும் அவற்றில் அரசியற் பிரமுகர்கள் கலந்து கொள்வதும் மேற்படி தடைச்சட்டத்தின் அடிப்படையில் சட்டவிரோதமான செயற்பாடுகள் ஆகும். இவ்வாறான பிரிட்டனில் புலிகள் ஆதரவுச் செயற்பாடுகளின் உச்சக்கட்டமாக அண்மையில் லண்டன் மாநகர சபைத் தலைவரே புலிகளுக்கு ஆதரவான பகிரங்கமான கூட்ட நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி லண்டனிலிருந்து வெளியாகும் "ஈவினிங் ஸ்ராண்டர்ட்" (evening Standard) என்னும் செய்திப் பத்திரிகை முக்கிய செய்திகளை வெளியிட்டுள்ளது. இவ்வாறு கடந்த 22 ஆம் திகதி வெளியான மேற்படி "ஈவினிங் ஸ்ராண்டர்ட்" செய்தித்தாளில் பிரசுரமாகியிருக்கும் தகவல்களுக்கேற்ப லண்டன் மாநகர சபை முதல்வர் கென் லிவிங்ஸ்ரன் லண்டனில் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு ஆதரவான முன்னணி அமைப்பாகிய பிரித்தானிய தமிழர் சபையின் (British Tamil Assembly) மாநாட்டில் கலந்துகொண்டு நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் விடுதலைப்புலிகள் அமைப்பு சட்டபூர்வமாகத் தடை செய்யப்பட்ட நிலையில் மேற்படி பிரிட்டிஷ் தமிழர் சபையே லண்டனில் புலிகள் இயக்க ஆதரவாளர்களால் புலிகள் அமைப்புக்காக பிரசாரம், நிதிசேகரிப்பு மற்றும் சர்வதேச உதவிகளைச் செய்வதற்காக உருவாக்கப்பட்ட பிரதான அமைப்பாகும். இதுபற்றிய உண்மை பிரிட்டனில் மட்டும் அல்ல சர்வதேச நாடுகளிலும் தெரிந்த தகவலாகும். இந்த நிலையில் இவ்வாறு குறித்த பிரிட்டிஷ் தமிழர் சபை மறை முகமான புலிகள் இயக்கத்தின் அமைப்பு என்ற உண்மையை லண்டனிலுள்ள ஷ்ரீலங்கா உயர்ஸ்தானிகர் உத்தியோகபூர்வமாக லண்டன் மாநகர சபை முதல்வருக்கு அறிவித்திருந்தபோதும் அதுபற்றி லண்டன் முதல்வர் கவனம் செலுத்தவோ அக்கறைப்படவோ இல்லை எனவும், திட்டமிட்டவாறு மேற்படி புலிகள் ஆதரவு அமைப்பாகிய பிரிட்டிஷ் தமிழர் சபையின் கூட்ட நிகழ்வில் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டுள்ளார் எனவும் மேலும் குறித்த தகவல்கள் தெரிவித்துள்ளன.
இவ்வாறு அண்மையில் லண்டன் மாநகர சபைத் தலைவர் கென் லிவிங்ஸ்ரன் கலந்துகொண்ட தமிழர் சபை மாநாட்டை விட இதற்கு முன்னரும் இதே வருடத்தில் புலிகள் இயக்கத்தின் பிரபல மாநாடு ஒன்றை லண்டனில் நடத்துவதற்கு அனுமதியும் ஆதரவும் வழங்கியுள்ளார் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கேற்ப வருட ஆரம்பப் பகுதியில் லண்டனில் வரலாற்றுப் பிரசித்திபெற்ற பொது மக்கள் கூடும் நிலையமாகிய "ட்ரபல்கார் சதுக்கத்தில்" (Traffelgar Square) புலிகள் இயக்கத்தினரும் ஆதரவாளர்களும் "கறுப்பு ஜூலை" சம்பவத்தை நினைவுகூரும் மாபெரும் கூட்ட நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்திருந்த போது மாநகரசபைத் தலைவர் கென் லிவிங்ஸ்ரன் அந்த மாநாட்டுக்காக அனுமதியும் பூரண ஆதரவும் வழங்கி குறித்த கறுப்பு ஜூலை மாநாடு சிறப்பாக நடைபெறக் காரணமாகச் செயற்பட்டார்.
இதுமட்டுமன்றி லண்டன் மாநகர சபை முதல்வர் பற்றி முஸ்லிம் அடிப்படைவாதம் அல்லது தீவிரவாதத்துடன் சம்பந்தப்பட்ட மற்றும் சில தகவல்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் தகவல்களின் விபரங்களுக்கேற்ப லண்டன் முதல்வர் கென் லிவிங்ஸ்ரன் முஸ்லிம் அடிப்படைவாதிகள் அல்லது தீவிரவாதிகள் எனக் கருதப்படுபவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்துள்ளார் எனவும் இவ்வாறு அவர்களுக்கு ஆதரவு அளிப்பதன் அடிப்படையில் பல்வேறு கொடுக்கல் வாங்கல்களை அவர் குறித்த முஸ்லிம் குழுவினருடன் வைத்திருக்கிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் லண்டன் மாநகரசபையின் புதிய முதல்வரைத் தெரிவதற்கான மாநகரசபைத் தேர்தல் எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ளது. கடந்த மாநகர சபைத் தேர்தலின்போது, கென் லிவிங்ஸ்ரன் தொழிற்கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டினார். இம்முறைத் தேர்தலிலும் அவர் தொழிற் கட்சியின் சார்பில் மீண்டும் அவர் போட்டியிடுவதுடன், அவருக்கு எதிராக கொன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் பொறிஸ் ஜோன்சன் போட்டியிடுகின்றார். இதுபற்றி லண்டனில் வாழும் சமாதானம் விரும்பும் சிறீலங்கா நாட்டவர்களும் புலிகளுக்கு எதிரான மக்களும் தெரிவிக்கும் தகவல்களுக்கேற்ப இம்முறை லண்டன் முதல்வருக்கான தேர்தலில் போட்டியிடும் கென் லிவிங்ஸ்ரனுக்குத் தாம் வாக்களிக்கப் போவதில்லை எனவும் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாகச் செயற் படும் அவருக்கு தமது ஆதரவை வழங்க முடியாது என்றும் கூறியுள்ளதுடன், தமிழர்கள் உட்பட ஏனைய சிறீலங்கா மக்களையும் கென் லிவிங்ஸ்ரனுக்கு வாக்களிக்க வேண்டாமெனக் கோரியுள்ளனர்.
திவயின லண்டன் குறிப்பு பகுதி: 27.04.2008