ஸ்ரீசாந்தை, ஹர்பஜன்சிங் கன்னத்தில் அறைந்த சம்பவத்தில் புதிய வீடியோ ஆதாரம் கிடைத்துள்ளது. அவருக்கு ஆயுட்கால தடை விதிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 10 ஆவது ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ் அணிகள் 25 ஆம் திகதி மொகாலியில் மோதின. இதில் 66 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பஞ் சாப் அணி வெற்றிபெற்றது.
ஆட்டம் முடிந்ததும் பஞ்சாப் அணி வீரர்கள் வெற்றியை கொண்டாடிக் கொண்டிருந்தபோது, மும்பை அணியின் தற்காலிக கப்டன் ஹர்பஜன்சிங், பஞ்சாப் அணி வீரர் ஸ்ரீசாந்தை திடீரென கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்டார். அதிர்ஷ்டம் இல்லாத கப்டன் என்று ஸ்ரீசாந்த் சொன்னதால், கோபத்தில் ஹர்பஜன்சிங் இவ்வாறு நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அடிவாங்கிய ஸ்ரீசாந்த் மைதானத்தில் நின்று கண்ணீர் விட்டு அழுதார். இந்த விவகாரம் இந்திய கிரிக்கெட்டில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.
இதையடுத்து ஹர்பஜன்சிங் ஐ.பி.எல். கிரிக்கெட்டிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டார். அவர் மீது நேற்று திங்கட்கிழமை டில்லியில் விசாரணை நடைபெற்றது. போட்டி நடுவர் இந்தியாவை சேர்ந்த 70 வயதான பரூக் என்ஜினீயர் விசாரணை நடத்தினார். டில்லியில் பிற்பகல் 1 மணிக்கு விசாரணை தொடங்கியது.
இதுவரை ஸ்ரீசாந்த் அழுத வீடியோ காட்சி மட்டுமே கிடைத்திருந்தது. இந்த நிலையில் ஸ்ரீ சாந்தை, ஹர்பஜன்சிங் கன்னத்தில் அறைந்த புதிய வீடியோ ஆதாரம் சிக்கியிருக்கிறது. மைதானத்தை சுற்றிலும் வைக்கப்பட்டிருந்த 21 கமெராக்களில் ஒன்றில் இந்தக் காட்சி பதிவாகியிருக்கிறது. அந்தக் காட்சி 10 நிமிடங்கள் ஓடுகிறது. புதிய வீடியோ ஆதாரம் கிடைத்திருப்பதை ஐ.பி.எல். தலைவர் லலித் மோடி உறுதி செய்திருக்கிறார்.
இதுபற்றி இந்திய கிரிக்கெட் சபை நிர்வாக அலுவலர் ரத்னாகர் ஷெட்டி கூறுகையில்;
`வீரர்களின் இதுபோன்ற மோசமான நடத்தையால் இந்திய கிரிக்கெட் சபைக்கு அவப்பெயர் ஏற்பட்டிருக்கிறது. வீடியோ காட்சியில் ஹர்பஜன்சிங், ஸ்ரீசாந்த் முகத்தில் அடிக்கும் காட்சி தெளிவாக இருக்கிறது. நடந்தது எல்லாம் போதும்" என்று குறிப்பிட்டார்.
வீடியோ ஆதாரம் வலுவாக இருப்பதால் ஹர்பஜன்சிங்குக்கு தடை விதிக்கப்படுவது உறுதியாகிவிட்டது. தவிர, இதுபோன்ற செயலை கிரிக்கெட்டில் துளியும் அனுமதிக்க முடியாது என்று இந்திய கிரிக்கெட் சபை கண்டித்திருக்கிறது. ஹர்பஜன்சிங் மீது ஐ.சி.சி. நடத்தை விதி 4.1 இன் கீழ் குற்றஞ் சுமத்தப்பட்டுள்ளது. இந்த விதிப்படி ஒரு வீரர், மற்றொரு வீரரை உடல் ரீதியாகத் தாக்கினால் அதற்கு 5 டெஸ்ட் அல்லது 10 ஒரு நாள் போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கலாம் அல்லது அதிகபட்சமாக ஆயுட்காலத் தடை வரை விதிக்கலாம் என்று கூறப்பட்டிருக்கிறது.
மைதானத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொள்வது ஹர்பஜன்சிங்குக்கு இது ஒன்றும் புதிது கிடையாது. தனது 11 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையில் ஹர்பஜன்சிங் பல தடவைகள் விதிகளை மீறி தண்டனைக்குக்குள்ளாகியிருக்கிறார்.
இதுவரை நடுவர் மற்றும் எதிரணி வீரர்களை பழித்துக் கொள்வது போன்ற பிரச்சினையை எதிர்கொண்டு வந்த ஹர்பஜன்சிங், இப்போது தனது சக நண்பரை அடித்து வசமாகச் சிக்கிக்கொண்டுள்ளார்.
விசாரணையின் போது, பஞ் சாப் அணியின் தலைமை நிர்வாகி மேக்ஸ்வெல், கப்டன் யுவராஜ்சிங், ஸ்ரீசாந்த் ஆகியோரும், மும்பை அணி தரப்பில் ஹர்பஜன்சிங், பயிற்சியாளர் லால்சந்த் ராஜ்புட், துணைக் கப்டன், அணியின் முகாமையாளர் உள்ளிட்டோர் ஆஜராகவுள்ளனர். மேலும், சாட்சிகளையும் அவர்கள் விருப்பமிருந்தால் அழைத்துச் செல்லலாம். ஐ.பி.எல். தலைவர் மோடியும் விசாரணையில் பங்கேற்கிறார்.
சாட்சிகள், விசாரணை மற்றும் வீடியோ ஆதாரங்களை விரிவாக ஆராய்ந்து அதன் அடிப்படையில் நடுவர் பரூக் என்ஜினீயர் தனது இறுதி தீர்ப்பை வழங்குவார். ஹர்பஜன்சிங்குக்கு ஆயுட்காலத் தடை விதிக்கப்படுமா? அல்லது 10 போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்படுமா?