மலேசியாவில் இதுநாள்வரை பிளவுபட்டிருந்த மூன்று முக்கிய எதிர்க்கட்சிகள் ஓர் அணியில் நின்று செயற்பட முடிவு செய்துள்ளன.
கடந்த மாத முற்பகுதியில் அங்கு நடைபெற்ற தேர்தலில் கடந்த 50 ஆண்டுகளாக அதிகாரத்திலிருக்கும் ஆளும் பரிசான் தேசியக் கூட்டணி அதிக பெரும்பான்மைப் பலத்தை பெறத் தவறியது. மாறாக மூன்று முக்கிய எதிர்க்கட்சிகள் பல இடங்களைக் கைப்பற்றி தங்கள் பலத்தை அதிகரித்துக் கொண்டுள்ளன.
முன்னாள் துணைப்பிரதமர் அன்வர் இப்ராகிம் தலைமையிலான இஸ்லாமிய கட்சி சீன மக்களின் பிரதிநிதியாக செயற்படும் ஜனநாயக நடவடிக்கைக் கட்சி மற்றும் நீதிக்கட்சி ஆகியவையே முக்கியமான எதிர்க்கட்சிகள்.
இக்கட்சிகளை ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி 1999 இல் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், மலேசியாவை இஸ்லாமிய நாடாக அறிவிக்க வேண்டுமென அன்வர் இப்ராகிம் கூறியதால் இக்கூட்டணி முறிந்து போனது.
தற்போது இம் மூன்று கட்சிகளும் ஓர் அணியில் திரண்டுள்ளன. ஆளும் கட்சிக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவதென இக்கட்சிகளின் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். இஸ்லாமிய நாட்டு கோரிக்கை குறித்து கூட்டணிக் கட்சிகளிடம் பேசி பின்னர் முடிவு செய்யப்படுமென அன்வர் தெரிவித்தார்.