குடிவரவினால் நாட்டின் பொருளாதாரம் நன்மையடைந்துள்ளது என பிரிட்டிஷ் அரசாங்கம் தெரிவித்திருப்பது அங்கு புதிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.
அரசாங்கத்தின் இக் கருத்தை விமர்சித்துள்ள பொருளாதார விவகார செயற்குழு, குடியேற்ற மட்டத்தினால் பொருளாதாரத்திற்கு எவ்வித நன்மையுமில்லையெனத் தெரிவித்துள்ளதுடன், நாட்டுக்குள் நுழையும் வெளிநாட்டினரை கட்டுப்படுத்துவதற்கான புதிய குடிவரவு விதிமுறைகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.
குடிவரவிலிருந்து குடியகல்வை கழிப்பதனால் பெறப்படும் தேறிய குடிவரவு பிரிட்டனில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ள இவ் அமைப்பின் அறிக்கை, 1990 களில் வருடத்திற்கு 100,000 ஆக இருந்த இத்தொகை 2006 இல் 300,000 இற்கும் அதிகமாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இவ்வறிக்கை போலந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள 9 நாடுகளிலிருந்து பிரிட்டனுக்குள் நுழையும் குடியேற்றவாசிகளினால் பிரிட்டனுக்கு ஏற்பட்டுள்ள தாக்கம் தொடர்பிலான வாதப் பிரதிவாதங்களுக்கும் வழிவகுத்துள்ளது.
சிறியளவான குற்றச்செயல்கள் அதிகரிப்பிலிருந்து பொருட்களின் விலை அதிகரிப்பு வரையான பல பிரச்சினைகளுக்கு குடியேற்றவாசிகள் காரணமாக இருப்பதாக குடியேற்றத்திற்கு எதிரான விமர்சகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இருந்த போதும் பிரிட்டனின் நலன்களுக்கு குடியேற்றவாசிகள் பங்களிப்பை வழங்குவதாக தெரிவிக்கும் அரசாங்கம், 2006 இல் பிரிட்டனின் பொருளாதாரத்திற்கு 6 பில்லியன் ஸ்ரேலிங் பவுண்ஸ் பங்களிப்பினை குடியேற்றவாசிகள் வழங்கியிருப்பதாக தெரிவிக்கின்றது.
சிறந்த மொழித்திறன் மற்றும் கல்வித் தகைமை மட்டம் என்பவற்றின் அடிப்படையில் குடியேற்றத்திற்கான விண்ணப்பங்களை பரிசீலிக்க இருப்பதால் குறைந்த திறன்களுடைய குடியேற்றவாசிகள் நாட்டுக்குள் நுழைவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்வதாக தெரிவித்துள்ள குடிவரவு அமைச்சர் லியாம் பைர்னி, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புள்ளி வழங்கும் முறைமை சம்பள அதிகரிப்புக்கு வழிவகுக்குமெனத் தெரிவித்தார்.
பொருளாதார விவகார செயற்குழுவின் அறிக்கை குடியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளது. இதன்படி தம்பதிகள் மற்றும் ஏற்கனவே பிரிட்டனில் வசிப்பவர்களின் உறவினர்கள் போன்றோர் பிரிட்டனுக்குள் அதிகளவில் நுழைவதை தடுக்கும் யோசனைகளை தெரிவித்துள்ளது.