திபெத்தில் நடைபெற்ற வன்முறைக்கு சீன அரசே காரணமென திபெத் ஆன்மீகத் தலைவர் தலாய்லாமா கூறியிருப்பதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பாக சீன வெளியுறவுத் துறையின் செய்தித் துறையின் செய்தித் தொடர்பாளர் ஜியாங் யு தெரிவிக்கையில்;
குற்ற உணர்வு காரணமாகவே தலாய்லாமா அப்படித் தெரிவித்துள்ளார். அத்துடன், அவருக்கு மனச்சாட்சி உறுத்துகிறது. அதனால் தான் வதந்திகளை பெரிதுபடுத்தி சீனா மீது குற்றஞ்சாட்டுகிறார்.
அங்கும் இங்குமாக பேசப்படும் வதந்திகளால் நடந்த உண்மைகள் மாறிவிடப் போவதில்லையெனத் தெரிவித்தார்.
திபெத்துக்கு விடுதலை கோரி அண்மையில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் திபெத் ஆன்மீகத் தலைவர் தலாய்லாமா தூண்டுதலாக இருந்தார் என்று சீன அரசு குற்றஞ்சாட்டியிருந்தது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட சீன வீரர்கள் புத்த துறவிகள் போன்று உடை அணிந்து திபெத்துக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டதாகத் தகவல் கிடைத்துள்ளது என்று தலாய்லாமா டில்லியில் கடந்த சனிக்கிழமை கூறியிருந்தார்.
சீன வீரர்கள் துறவிகள் போன்று உடை அணிந்திருந்தனர். ஆனால், அவர்கள் வைத்திருந்த வாள் திபெத்தியர்கள் பயன்படுத்தும் வாள் அல்ல. அது சீனர்கள் பயன்படுத்தும் வாள் என்று நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர் என்றும் தலாய்லாமா கூறியிருந்தார்.
தலாய்லாமாவின் இந்தக் குற்றச்சாட்டுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
திபெத்துக்கு விடுதலை கோரி கடந்த மார்ச் 14 ஆம் திகதி திபெத் தலைநகர் லாசாவில் நடந்த கலவரத்தில் 20 பேர் இறந்தனர். தலாய்லாமா ஆதரவாளர்கள் தான் இந்தக் கலவரத்தில் ஈடுபட்டனர் என்று சீனா கூறி வருகிறது. அதை தலாய்லாமா மறுத்துள்ளார்.