திருகோணமலை மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்து மட்டக்களப்பில் தங்கியிருந்த ஒரு தொகுதியினர் நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு 20 இ.போ.ச. பஸ்வண்டிகளில் தமது சொந்த இடங்களுக்கு மீள்குடியேற்றப்படுவதற்காக அழைத்துச் செல்லப்பட்டதாக மாவட்ட செயலக மீள் குடியேற்ற உதவிப் பணிப்பாளர்கள் ஏ.எல்.எம். சரீப் தெரிவித்துள்ளார்.
மூதூர் செயலகப் பிரிவின் பள்ளிக்குடியிருப்பு கிராமத்தினைச் சேர்ந்த 132 குடும்பங்களைச் சேர்ந்த 464 பேர் மீண்டும் தமது சொந்த இடங்களில் மீள் குடியேற்றப்படவுள்ளதாகவம் இவர்கள் ஏறாவூர்ப்பற்று, மண்முனை வடக்கு, கோரளைப்பற்று, களுவாஞ்சிகுடி ஆகிய பிரதேசங்களில் இருந்தே மட்டக்களப்பு- வாகரை வெருகல் ஊடாக அரசாங்க அதிகாரிகள் வழித்துணையுடன் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் புனர்வாழ்வு உதவிப் பணிப்பாளர் சரீப் தெரிவித்தார்.
இதேவேளை, மூதூர் பிரதேச செயலகப் பிரிவினைச் சேர்ந்த தங்கபுரம், சின்னக்குளம், ஷ்ரீனிவாசபுரம், மாவட்டகுளம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த இடம்பெயர்ந்தவர்களும் விரைவாக இம்மாத இறுதிக்குள் மீள்குடியேற்றப்படவுள்ளதாகவும் உதவிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.