*விடுதலைப் புலிகள் குற்றச்சாட்டு
மன்னார் மடு தேவாலயத்தை அழிக்கும் நோக்கில் படையினர் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டிருப்பதாகவும் தொடர்ந்து நடைபெற்று வரும் மோதலில் 15 படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் நேற்று புதன்கிழமை விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் சார்பு இணையத்தளமொன்று கூறுகையில்;
மன்னார் மடுப்பகுதிக்கு 1,500 மீற்றர் தொலைவில் கடும் மோதல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. மடுவுக்கு தெற்காகவுள்ள பண்டிவிரிச்சான் பக்கமாக 1,500 மீற்றர் தொலைவில் கடந்த இரு நாட்களாக படையினர் முன்நகர்வுத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதன் போது படையினர் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 50க்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர்.
பண்டிவிரிச்சான் பகுதியிலிருந்து மடு புனித வளாகப்பகுதியில் தொடர்ச்சியாக படையினர் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர். மடு கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகள் கோவிலுக்குரிய பகுதிகளில் படையினரின் ஷெல்கள் வீழ்ந்து வெடிக்கின்றன. இதனால், கோவிலுக்குரிய கட்டடங்கள், கிணறுகள் ஆகியன சேதமாகியுள்ளன.
எங்கும் ஷெல்கள் வீழ்ந்து வெடிக்கின்றன. கோவிலுக்குள்ளிருக்கும் மடுப் பரிபாலகர், மதகுருமார் மற்றும் கோவில் பணியாளர்கள் இரண்டு நாட்களாக பதுங்கு குழிக்குள் தான் இருக்கின்றனர்.
அரசு, மடு தேவாலயத்தை அழிக்கும் வகையில் தாக்குதலை தொடர்ந்தும் மிகக் கடுமையாக நடத்திக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் கூறுகையில்;
"படையினரின் தாக்குதல்கள் மடு தேவாலய வளாகத்தினுள் வீழ்ந்து கொண்டிருக்கிறது. மடு தேவாலயப் பகுதியை நாம் ஆட்லறி ஷெல் தாக்குதலுக்கான நிலைகளாக பயன்படுத்துவதாக அரசும் படையினரும் கூறுவது அப்பட்டமான பொய்யாகும்.
எம்மிடம் நீண்ட தூர ஆட்லறிகளும் மோட்டார்களுமிருக்கையில் நாம் ஏன் மடு தேவாலயப் பகுதியை ஷெல் தாக்குதல்களுக்கான நிலைகளாகப் பயன்படுத்த வேண்டும்.
கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே மடு தேவாலயப் பகுதியை இலக்காக வைத்து அரசும் படையினரும் பாரிய படை நடவடிக்கையை ஆரம்பித்த போது, தேவாலயப் பகுதியை யுத்த சூனியப் பிரதேசமாக பிரகடனப்படுத்துமாறு தேவாலய நிர்வாகம் எம்மிடம் கேட்ட போது, நாம் அதற்கு பூரண ஆதரவு வழங்கினோம்.
எனினும், இலங்கை அரசோ, படையினரோ இதற்கு ஆதரவு வழங்கவில்லை. மாறாக, மடு தேவாலயப் பகுதியை இலக்கு வைத்து பாரிய தாக்குதலை ஆரம்பித்து அப்பகுதியிலிருந்து மக்களை ஷெல் தாக்குதல் மூலமும் ஆழ ஊடுருவும் படையணியின் கிளைமோர் தாக்குதல் மூலமும் விரட்டியடித்ததாக"வும் தெரிவித்துள்ளார்.
மணல்மோட்டை பகுதி மோதலில் 10 படையினர் பலி
இதேநேரம், மன்னார் கட்டுக்கரை மணல் மோட்டைப் பகுதியிலிருந்து படையினர் முன்நகர்வுத் தாக்குதலை நேற்று அதிகாலை 5 மணிக்கு மேற்கொண்டுள்ளனர். பாலைப்பெருமாள் கட்டுப் பகுதி நோக்கியதாக படையினரின் முன்நகர்வுத் தாக்குதல்கள் அமைந்துள்ளன. இங்கு மோதல்கள் தொடர்கின்றன.
நேற்று மாலை வரை இந்த நடவடிக்கைக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்தும் கடும் பதில் தாக்குதல்களில் படையினர் 10 பேர் கொல்லப்பட்டதுடன், 40 க்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.