கத்தோலிக்க மக்களின் யாத்திரை தலமாக விளங்கும் மடுத் தேவாலயப் பகுதியை அமைதி வலயமாகப் பேணுமாறுகோரி மன்னார் நகரில் நேற்று புதன்கிழமை அமைதிப் பேரணி ஒன்று நடத்தப்பட்டது.
மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் காலை 9 மணிக்கு அமைதி, சமாதானம் வேண்டி நடைபெற்ற விசேட வழிபாடுகளின் பின்னர் அங்கிருந்து அமைதிப் பேரணி மன்னார் மறை மாவட்ட ஆயர் அதி.வண. இராயப்பு யோசப் ஆண்டகை தலைமையில் புறப்பட்டது.
இதில் மன்னார் மறை மாவட்டத்தில் உள்ள பங்குத் தந்தையர்கள், அருட்சகோதரிகள், பொதுஅமைப்புகளின் பிரதிநிதிகள், வர்த்தகர்கள், வெளிமாவட்டத்தின் அருட் தந்தையர்கள் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர்.
இப்பேரணியை முன்னிட்டு மன்னார் நகரில் உள்ள சகல வர்த்தக நிலையங்களும் பகல் வரையும் மூடப்பட்டிருந்தன.
இப்பேரணி புனித செபஸ்தியார் வீதி, பசார் வீதி என்பவற்றின் ஊடாக மன்னார் கச்சேரியை சென்றடைந்தது.
அமைதி, சமாதானத்தை வலியுறுத்தும் சுலோகங்களும் பேரணியில் எடுத்துச் செல்லப்பட்டன.
பாடசாலைகள், அரச தனியார் நிறுவனங்கள் வழமை போல இயங்கின. போக்குவரத்து சேவைகளும் நடைபெற்றன.
பகல் 11.30 மணியளவில் மன்னார் கச்சேரியில் வைத்து மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.நீக்கிலஸ்பிள்ளையிடம் ஆயர் மகஜரைக் கையளித்தார்.
அங்கு வந்தவர்களுக்கு மகஜர் அருட்தந்தை ஒருவரால் வாசித்துக் காட்டப்பட்டது.