தமிழர்களை அவமதிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள சிங்களத் திரைப்படமான `பிரபாகரன்' படத்துக்கு இடைக்கால தடை விதித்துள்ள சென்னை நீதிமன்றம், சென்னை ஜெமினி வண்ண ஆய்வகத்திலிருந்து படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் உட்பட எவரிடமும் பிரபாகரன் படத்தின் படச்சுருள்களையோ அதன் பிரதிகளையோ இருவாரகாலத்துக்கு கொடுக்கக் கூடாதெனவும் உத்தரவிட்டுள்ளது.
"பிரபாகரன்" என்ற பெயரில் தமிழர்களை அவமதிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டு சென்னையில் மேலதிக பணிகளை மேற்கொண்டிருந்த சிங்களத் திரைப்படத்தை முடக்க வேண்டும் என்றும் அப்படத்தின் பிரதிகளை இந்திய அரசு அழிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி சென்னை மாநகர முதலாவது உதவி உரிமையியல் நீதிமன்றில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் செவ்வாய்க்கிழமை வழங்க்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கின் விசாரணை நேற்று புதன் கிழமை நீதிபதி சேதுமாதவன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
தொல்.திருமாவளவனின் சட்டத்தரணிகளான இளமாறன், ஆர்வலன் ஆகியோர் சார்பில் மூத்த சட்டத்தரணி ஏ.ஆர்.எல்.சுரேஸ் நீதிமன்றத்தில் முன்னிலையாகி தெரிவித்ததாவது;
இந்தத் திரைப்படம் மொத்த தமிழினத்தையே இழிவுபடுத்தக் கூடியது. அதேபோல் இப்படத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப் போனவர்களை `வன்முறைக்கும்பல்கள் என்று சிங்கள திரைப்பட இயக்குநர் தெரிவித்திருக்கிறார். இது அவர்களின் மதிப்பையும் சீர்குலைப்பதாகும்.
சிறார்களை படையணிகளில் விடுதலைப்புலிகள் சேர்ப்பதாக பொய்யான தகவல்களை அந்தப் படத்தில் இணைத்துள்ளனர். அதேபோல் செஞ்சோலைப் படுகொலையை மறைத்து பாடசாலை சிறார்கள், போர்க்களத்தில் கொல்லப்பட்ட சிறார்கள் என்றும் பொய்யான காட்சியும் இடம்பெற்றுள்ளது. மேலும், சிங்களவர்கள் உள்நாட்டு அகதிகளாக இடம்பெயர்ந்திருப்பதாக பொய்யான தகவலைக் கொண்டுள்ளது இப்படம். நோர்வேயின் அனுசரணையிலான சமாதானத்தை எதிர்க்கின்ற காட்சிகளும் இப்படத்தில் இடம் பெற்றுள்ளன. எனவே, இரு வேறு இனங்களுக்கிடையே ஆழமான விரிசலையும் மோதலையும் இப்படம் ஏற்படுத்தும் என்றார் மூத்த சட்டத்தரணி சுரேஸ்.
இதனைக் கேட்ட நீதிபதி, சென்னை ஜெமினி வண்ண ஆய்வகத்திலிருந்து தயாரிப்பாளர், இயக்குநர் உட்பட யாரிடமும் பிரபாகரன் படத்தின் சுருள்களையோ அதன் பிரதிகளையோ இரு வாரகாலத்துக்கு எவரிடமும் கொடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டார்.
மேலும் இந்த வழக்கின் விசாரணையை எதிர்வரும் ஜூன் மாதம் 9 ஆம் திகதிக்கு அவர் ஒத்திவைத்தார்.