முல்லைத்தீவு கடற்பிரதேசம் உட்பட கிழக்கு கடற்பிராந்தியம் மற்றும் வடக்கு கடற்பிராந்தியங்களில் கடற்புலிகளின் படகுகளின் நடமாட்டங்கள், கடற்கரும்புலித் தாக்குதல் நடவடிக்கைகள் தொடர்ந்து இருந்துவரும் நிலையில் புலிகள் இயக்கத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ள கிழக்குப் பிரதேச கடற்கரைப் பிரதேசங்களில் முக்கியமாக முல்லைத்தீவு பிரதேசத்திலுள்ள கடற்புலிகளின் முகாம்களைத் தாக்கி அழிப்பதற்காக ஷ்ரீலங்கா கடற்படையும், விமானப்படையும், இராணுவமும், தாக்குதல் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்த வகையில் கடந்த காலங்களில் கடற்புலிகளின் நிலையம் என அடையாளம் காணப்பட்ட முகாம்கள் மீது அண்மைக்காலங்களில் விமானப்படையினர் தீவிர விமானத் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர்.
இந்த கடற்புலிகளின் முகாம்கள் அழிப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக முல்லைத்தீவில் அலம்பில் பிரதேசத்தில் இருக்கும் கடற்புலிகள் பிரிவினர் பிரதான முகாம் தொடர்களையும் விமானப்படையினர் தாக்கி அழித்துள்ளனர். இவ்வாறு அலம்பில் பிரதேசத்தில் சிலாவத்தை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பெரும்பரப்பிலான கடற்புலிகள் முகாம்கள் மீது கடந்த 30 ஆம் திகதி பசல் விமானப்படையின் தாக்குதல் ஜெற் விமானங்கள் கடும் குண்டு வீச்சுத்தாக்குதல்களை மேற்கொண்டன. குறித்த கடற்புலிகள் முகாமின் நிலையம் துல்லியமாக அடையாளம் காணப்பட்டு குறிதவறாத முறையில் அந்த முகாம் மீது குண்டுகள் வீசப்பட்டதாகவும் இந்த வெற்றிகரமான தாக்குதலில் கடற்புலி முகாம் பகுதிகள் முற்றாக அழிக்கப்பட்டதாகவும் விமானப்படை தரப்பு தெரிவித்துள்ளது.
அத்துடன் குறித்த முகாம்கள் தீவிர குண்டு வீச்சுத் தாக்குதலுக்குள்ளான வேளை முகாமில் இருந்த கடற்புலிகள் படகுகளுக்கும், மேலும் அங்கு நிலைகொண்டிருந்த கடற்புலிகளுக்கும் என்ன நடந்தது என உறுதியாகத் தெரிந்து கொள்ள முடியாவிட்டாலும் தீவிரமாகத் தொடுக்கப்பட்ட விமானக்குண்டு வீச்சிலிருந்து படகுகளும் கடற்புலிகளும் தப்பியிருக்க முடியாதென கடற்படையினர் தெரிவித்துள்ளனர். பெரும்பாலும் படகுகளும் எரிந்து நாசமாகி விட்டதாகவும் கடற்புலிகள் கொல்லப்பட்டு விட்டதாகவுமே தகவல்கள் தெரிவிப்பதாக கடற்படை தரப்பில் மேலும் கூறப்பட்டுள்ளது.