ஷேவாக்கின் அதிரடியை கட்டுப்படுத்த தென்ஆபிரிக்க அணி புதிய திட்டம் வகுத்துள்ளது. `பவுன்சர்' மழை பொழிந்து இவரது விக்கெட்டைக் கைப்பற்ற வியூகம் அமைத்துள்ளது.
இந்தியா வந்துள்ள தென்ஆபிரிக்க அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.சென்னையில் நடந்த முதல் டெஸ்ட் டிரா ஆனது. இரண்டாவது டெஸ்ட் ஆமதாபாத்தில் இன்று தொடங்குகிறது. காயம் காரணமாக சச்சின் நீக்கப்பட்ட நிலையில், இந்திய அணியில் யுவராஜ், கைவ் இடையே போட்டி காணப்படுகிறது. இவர்களில் யாரை தேர்வு செய்வது என்ற குழப்பம் நீடிக்கிறது.
இஷாந்த் இன்னும் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையவில்லை என்று கூறப்படுகிறது. இவரை அவசரப்பட்டு அணியில் சேர்த்தால் சிக்கல் ஏற்படலாம். இப்படி இந்திய அணிக்கு தலைக்கு மேல் பிரச்சினைகள் உள்ளன.
ஆனால் தென்ஆபிரிக்க அணிக்கு இருக்கும் ஒரே பிரச்சினை ஷேவாக் தான். சென்னை டெஸ்டில் அதிவேகமாக 300 ஓட்டங்களை விளாசிய இவர், மீண்டும் அதிரடி காட்டுவாரா என்று அஞ்சுகிறது. எனவே இவரை வீழ்த்த `பவுன்சர்' ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு செய்துள்ளது. இவரது உடலை ஒட்டி `பவுன்சர்' வீசும் போது, விக்கெட்டை இழந்து விட வாய்ப்புள்ளதாம். இது பற்றி தென்ஆபிரிக்க பயற்சியாளர் மிக்கி ஆர்தர் கூறுகையில்,
சென்னையில் ஷேவாக்கின் ஆட்டம் பிரமிக்க வைத்தது. அதிரடியாக விளையாடி அசத்தினார். இவரை கட்டுப்படுத்த தொடர்ந்து `பவுன்சர்' வீசத் திட்டமிட்டுள்ளோம். இதற்கு ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்க வேண்டியது மிகவும் அவசியம். தற்போது புல் காணப்படுகிறது. இது சாதகமான விடயம். வெயிலின் தாக்கம் அதிகமாக இல்லை. கேப்டவுன், ஜொகனஸ் பேர்க்கில் இத்தகைய தட்பவெப்பம் தான் நிலவும்.
இந்தியாவில் எஸ்.ஜி., வகை பந்துகளில் விளையாடி பழக்கம் ஏற்பட்டு விட் டது. இவை ஆமதாபாத் ஆடுகளத்தில் எப்படி செயல்படும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். முதல் போட்டியில் எங்களது துடுப்பாட்ட வீரர்கள் மிகச் சிறப்பாக ஆடினார்கள். `ஸ்பின்னர்களை' சுலபமாக சமாளித்தார்கள். பந்துவீச்சு மற்றும் சம்பலத்தில் உள்ளது. எதிரணியின் 20 விக்கெட்டுகளை கைப்பற்றக் கூடிய பந்துவீச்சாளர்கள் அணியில் உள்ளனர்.
சச்சின் நீக்கப்பட்ட நிலையில் கைவ் சேர்க்கப்பட்டுள்ளது. இந்திய அணிக்கு வலுச் சேர்க்கிறது. உள்ளூர் போட்டிகளில் கைவ் அதிக ஓட்டங்களை எடுத்துள்ளார். தோனி, பதான் ஆகிய இரண்டு சகல துறை வீரர்கள் இருப்பதால், ஆமதாபாத் போட்டியில் 5 பந்து வீச்சாளர்கள் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாகவும் மிக்கி ஆர்தர் கூறினார்.
சென்னை ஆடுகளம் பற்றி அதிகமாக விமர்சிக்கப்பட்டது. துடுப்பாட்ட வீரர்களுக்கு சொர்க்கபுரியாக இருந்ததால், 500 ஓட்டங்களுக்கு மேல் எடுக்கப்பட்டது. இம்முறை ஆமதாபாத்தில் மிகச் சிறந்த ஆடுகளம் அமைக்கப்பட்டிருப்பதாக பராமரிப்பாளர் திராஜ் பார்சனா தெரிவித்தார்." சென்னையை விட சிறந்த ஆடுகளம் அமைக்கப்பட்டுள்ளது. பந்து வீச்சு, துடுப்பாட்டம் என இரண்டுக்கும் ஒத்துழைக்கும். தொடக்கத்தில் வேகப்பந்துவீச்சு எடுபடும். பின்னர் `ஸ்பின்னர்கள்' சாதிக்கலாம்", என்றார்.
இங்கு 1996 இல் நடந்த தென்ஆபிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் ஷ்ரீநாத் 6 விக்கெட் வீழ்த்தி வெற்றி தேடிக்கொடுத்தார்.இது ஸ்ரைன், நிற்னி உள்ளிட்ட வேகங்களுக்கு மகிழ்ச்சி தரும் விடயம்.
இந்திய கப்டன் கும்பிளேக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இஷாந்த் சர்மா விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக முதல் டெஸ்டில் பங்கேற்கவில்லை. இவர்களுக்கு நேற்று உடல் தகுதி சோதனை நடந்தது. இதில் தேறினால் மட்டுமே இரண்டாவது டெஸ்டில் இடம்பெற முடியுமென்ற நிலையே உள்ளது.