அக்தருக்கு 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளதால் அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது.
32 வயதான அக்தர் 1997 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். இதுவரை 46 டெஸ்டில் விளையாடி 178 விக்கெட்டுகளும், 138 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 219 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.
அக்தர் ஏற்கனவே, 2006 ஆம் ஆண்டு ஊக்கமருந்து சோதனையில் சிக்கி 2 ஆண்டு தடைக்குள்ளானார். பின்னர் மேல் முறையீடு செய்து தண்டனையிலிருந்து தப்பியது குறிப்பிடத்தக்கது. எப்போதும் ஏதாவது பேசி வம்பில் மாட்டிக் கொள்ளும் அக்தரின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு கடைசியில் அதுவே முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.
இருப்பினும் அவருக்கு ஆறுதலளிக்கும் செய்தியாக ஐ.பி.எல் போட்டியில் ஆட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஷாருக்கானை உரிமையாளராகக் கொண்ட கொல்கத்தா அணிக்காக அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் கனேரியா மீதும் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தியது. கிரிக்கெட் சபை ஒப்பந்த தரவரிசையில் தரம் இறக்கம் செய்யப்பட்டதால் அது பற்றி கனேரியா பகிரங்கமாக புகார் கூறினார். ஆனால், அவருக்கு எந்தத் தண்டனையும் விதிக்கப்படவில்லை. அவர் முதல் முறையாக இது போன்ற புகாரில் சிக்கியிருப்பதால் எச்சரிக்கையோடு தப்பினார். மேலும் , பத்திரிகையாளர்களிடம் எதுவும் பேசக்கூடாது என்று அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடை குறித்து அக்தர் கூறுகையில்;
பாகிஸ்தான் நாட்டுக்காகவும், அணிக்காகவும் எனது சிறப்பான பங்களிப்பையளித்துள்ளேன். இந்தத் தடையை நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன். இந்தத் தண்டனை மிகுந்த அதிர்ச்சியையும் , ஏமாற்றத்தையும் அளிக்கிறது. எனது மனதையும் காயப்படுத்தியிருக்கிறது. இது கடுமையான , நேர்மையற்ற முடிவு. தண்டனையை எதிர்த்து நீதிமன்றம் சென்று போராடுவேன்.
பாகிஸ்தான் கிரிக்கெட் சபையில் ஒப்பந்தத்தில் `ஏ' தரத்திலிருந்து என்னை புறந்தள்ளியதால் அதனால், ஏற்பட்ட பாதிப்பாலும் உணர்ச்சி வேகத்தாலும் ஏதோ சொல்லி விட்டேன். இதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை மற்றும் எல்லோர் முன்னிலையில் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவிடம் மன்னிப்புக் கேட்டேன்.
இதனால், என் மீது கருணை காட்டப்படும் என்று நினைத்தேன். ஆனால், மிகவும் கடுமையான நடவடிக்கையை எடுத்திருக்கிறார்கள். இது எனது கிரிக்கெட் வாழ்க்கையையே முடிவுக்குக் கொண்டு வந்து விடும். நான் இன்னும் எனது நாட்டு அணிக்காக விளையாட விரும்புகிறேன். என் மீதான தடை நீக்கப்படும் வரை ஓயமாட்டேன் என்றார்.